திருப்பதியில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா வன உயிரியல் பூங்காவில் வனவிலங்குகளை இரவு நேரங்களிலும் பார்வையாளர்கள் கண்டுகளிக்கும் (நைட் சபாரி) வசதியை தொடங்க ஆந்திர மாநில அரசு முடிவு செய்துள்ளது.
திருப்பதி அலிபிரியில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா உயிரியல் பூங்கா ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய பூங்காவாகக் கருதப்படுகிறது. இங்கு சிங்கம், புலி, வெள்ளைப் புலி, சிறுத்தை, காண்டாமிருகம், முதலைகள், யானை மற்றும் பல வகை பறவையினங்கள், பாம்பினங்கள் போன்றவை பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இவற்றை பார்வையாளர்கள் காண வசதியாக பூங்கா நிர்வாகம் பாதுகாப்புடன் கூடிய வாகனங்களை பகல்நேரங்களில் பயன்படுத்தி வருகிறது.
இந்நிலையில் சிங்கப்பூரில் உள்ளது போன்று, இப் பூங்காவில் இரவு நேரங்களிலும் வனவிலங்குகளை பார்வையாளர்கள் பாதுகாப்பாக கண்டுகளிக்க வசதியாக "நைட் சபாரி' திட்டத்தைத் தொடங்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான திட்ட அறிக்கையை வன உயிரியல் பூங்கா அதிகாரிகள் தயாரித்துள்ளனர்.
200 ஏக்கர் பரப்பளவில் பூங்காவை விரிவாக்கம் செய்வதுடன், ரூ. 50 கோடி மதிப்பீட்டில் நைட் சபாரிக்கான பணிகளைத் தொடங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான திட்ட அறிக்கை முதன்மை வனப் பாதுகாவலரின் அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு அனுமதி கிடைத்த பின்னர், பணிகள் தொடங்கப்படும் என ஸ்ரீவெங்கடேஸ்வரா வன உயிரியல் பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனர்.