குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் பதவியேற்ற பிறகு கடந்த 3 வாரத்தில் 6 முக்கிய சட்ட மசோதாக்களுக்கு அவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
நாட்டின் 14-ஆவது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் கடந்த ஜூலை 25-ஆம் தேதி பதவியேற்றார். பொறுப்பேற்று 3 வாரங்கள் ஆகியுள்ள நிலையில் கப்பல், கடல்சார் நீதி, விவகாரங்கள் சட்டம் 2017, சிறார்களுக்கு இலவச, கட்டாயக் கல்விச் சட்டம் 2017, புள்ளிவிவரங்கள் சேகரிப்பு சட்டத் திருத்தம் 2017, இந்திய தகவல் தொழில்நுட்பக் கல்வி நிலையங்கள் (அரசு, தனியார் பங்களிப்பு) சட்டம் 2017, இந்திய தேசிய அறிவியல், தொழில்நுட்பக் கல்விச் சட்டத் திருத்தம் 2017, காலனி வடிவமைப்பு மேம்பாட்டுக் கல்வி நிலையச் சட்டம் 2017 ஆகிய 6 சட்டங்களுக்கு ராம்நாத் கோவிந்த் இதுவரை ஒப்புதல் அளித்துள்ளார்.
இவை அனைத்தும் ஏற்கெனவே, மக்களவை, மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டவையாகும்.
இதில், கப்பல், கடல்சார் நீதி, விவகாரங்கள் சட்டத்தின் மூலம் நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் இருந்து நடைமுறையில் இருந்த இரு பழைய சட்டங்கள் முடிவுக்கு வந்துவிட்டன. அப்போதைய சட்டப்படி கடல்சார் விவகாரங்களை சென்னை, மும்பை, கொல்கத்தா நீதிமன்றங்களில் மட்டுமே விசாரிக்க முடியும் என்ற நிலை இருந்தது. இப்போதைய புதிய சட்டத்தின்படி, தவறு நடந்த கடல் எல்லை எந்த மாநில உயர் நீதிமன்றத்தின்கீழ் வருகிறதோ அவர்கள் விசாரணை மேற்கொள்ள முடியும்.
புள்ளி விவரங்கள் சேகரிப்பு சட்டத் திருத்தத்தின் மூலம், இனி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலும் மத்திய அரசு சமூக-பொருளாதாரக் கணக்கெடுப்பை நடத்த உரிமை கிடைத்துள்ளது.