இந்தியா நாட்டின் 70-ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் ஆகஸ்ட் 15-ந் தேதி சிறப்புடன் கொண்டாடப்பட உள்ளது. மத்திய, மாநில அரசுகள் இதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டின் 14-ஆவது குடியரசுத்தலைவராக பதவி ஏற்றுள்ள ராம்நாத் கோவிந்த், சுதந்திர தின வாழ்த்துச் செய்தியை திங்கட்கிழமை பதிவு செய்தார். அதில், புதிய இந்தியாவுக்காக மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறியதாவது:
நாம் அனைவரும் புதிய இந்தியாவை உருவாக்க சபதம் ஏற்க வேண்டும். அந்த புதிய இந்தியாவில் ஏழ்மை முற்றிலும் அகற்றப்பட வேண்டும்.
இந்திய சுதந்திரத்துக்காக பாடுபட்ட அனைத்து தலைவர்களையும் நாம் இந்த நேரத்தில் நினைவு கூற வேண்டும். அவர்களின் தியாகத்தில் மலர்ந்தது தான் நம் தேசம்.
சுதந்திரப் போராட்ட தியாகிகளை முன்மாதிரியாக கொண்டு நாம் செயல்பட வேண்டும். நம் தேசத்தை நாம்தான் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.
மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் இதில் சிறந்த பங்களிப்பை தருகிறது. ஒரு அரசானது மக்களுக்குத் தேவையான சட்டங்களை வடிவமைத்து செயல்படுத்தலாம்.
ஆனால், அதை மக்களால் மட்டுமே வெற்றியடைய செய்ய முடியும். நம் நாட்டில் இதுவரை 1 கோடி பேருக்கும் மேல் எரிவாயு மானியத்தை விட்டுக்கொடுத்துள்ளனர்.
இதனால் ஏழைகளும் எரிவாயுவை எளிதில் பயன்படுத்த முடிகிறது. புதிய இந்தியா என்பதே நம் மனதிலும், உடலிலும் இருப்பதுதான். அதுதான் நமது பாரம்பரியமும், கலாசாரமும்.
நம் தேசத்துக்கு வரி செலுத்துவதில் எவ்வித பாரபட்சமும் இருக்கக் கூடாது. அதுவே ஒரு நாட்டின் வளர்ச்சியாகும்.
சரியாக வரி செலுத்துவதுதான் ஒரு குடிமகனாக நமக்கு எல்லாம் பெருமை. ஜிஎஸ்டி வரியை அனைவரும் ஏற்றுக்கொண்டு இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
அனைவருக்கும் என் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் என்றார்.