ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்எல்டி) கட்சியின் தேசியத் துணைத் தலைவராக அக்கட்சித் தலைவர் அஜித் சிங்கின் மகன் ஜெயந்த் சௌதரி நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆர்எல்டி கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த அவரை தேசியத் துணைத் தலைவராக அவரது தந்தை அஜித் சிங் நியமித்தார். இதற்கான உத்தரவு ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது.
ஜெயந்த் சௌதரி கடந்த 2009 மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தின் மதுரா தொகுதியில் வெற்றி பெற்றார். எனினும், 2014 மக்களவைத் தேர்தலில் அவர் தோல்வியடைந்தார். அவர் பிரிட்டனில் உள்ள பிரபல பொருளாதாரக் கல்வி நிலையமான லண்டன் ஸ்கூல் ஆஃப் இகனாமிக்ஸில் பட்டம் பெற்றுள்ளார்.
ஜாட் சமூகத்தினர் பெரும்பான்மையாக வாழும் மேற்கு உத்தரப்பிரதேச பகுதியானது ஆர்எல்டி கட்சியின் கோட்டையாகக் கருதப்பட்டது. எனினும், 403 இடங்களைக் கொண்ட உத்தரப் பிரதேச சட்டப் பேரவைக்கு சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற தேர்தலில் அக்கட்சி 284 இடங்களில் போட்டியிட்டபோதிலும், பாக்பத் மாவட்டத்தில் உள்ள சப்ரௌலி என்ற ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது.