திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ. 3.09 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
பக்தர்கள் ஏழுமலையானைத் தரிசித்த பின்னர், ஸ்ரீவாரி உண்டியலில் காணிக்கைகளை செலுத்தி வருகின்றனர். அதன்படி வெள்ளிக்கிழமை மாலை முதல் சனிக்கிழமை மாலை வரை பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில் ரூ. 3.09 கோடி வசூலானது.
93,290 பக்தர்கள் தரிசனம்
ஏழுமலையானை சனிக்கிழமை முழுவதும் 93,290 பக்தர்கள் தரிசனம் செய்தனர். இவர்களில் 57,214 பேர் தலைமுடியைக் காணிக்கையாகச் செலுத்தினர்.
ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி தர்ம தரிசன பக்தர்கள் 31 காத்திருப்பு அறைகளும் நிரம்பி ஒரு கி.மீ. தொலைவுக்கு காத்திருந்தனர். தர்ம தரிசனத்திற்கு 14 மணி நேரம் ஆனது. திவ்ய தரிசன பக்தர்கள் வரிசையில் காத்திருக்காமல் டோக்கனில் குறிப்பிட்டுள்ள நேரத்துக்கு சென்றால் நேரடியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். 20 ஆயிரத்திற்கு மேற்பட்டு வரும் நடைபாதை பக்தர்கள் தர்ம தரிசனத்தில் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.
ரூ. 14.68 லட்சம் நன்கொடை
ஏழுமலையான் பெயரில் தேவஸ்தானம் ஏற்படுத்தியுள்ள பல்வேறு அறக்கட்டளைகளுக்கு பக்தர்கள் நன்கொடையை அளித்து வருகின்றனர்.
அதன்படி சனிக்கிழமை ஏழுமலையானின் அன்னதான அறக்கட்டளைக்கு ரூ. 13.68 லட்சம், உயிர்காக்கும் மருத்துவ அறக்கட்டளைக்கு ரூ. 1 லட்சம் என மொத்தம் ரூ. 14.68 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது.