கார்த்தி சிதம்பரம் மீதான 'லுக் அவுட்' நோட்டீஸு க்கு தடையில்லை : உச்ச நீதிமன்றம் உத்தரவு! 

கார்த்தி சிதம்பரத்திற்கு எதிரான 'லுக் அவுட்' நோட்டீஸுக்கு சென்னை உயர் நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
கார்த்தி சிதம்பரம் மீதான 'லுக் அவுட்' நோட்டீஸு க்கு தடையில்லை : உச்ச நீதிமன்றம் உத்தரவு! 

புதுதில்லி கார்த்தி சிதம்பரத்திற்கு எதிரான 'லுக் அவுட்' நோட்டீஸுக்கு சென்னை உயர் நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, மோரீஷியஸ் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து முதலீடுகளைப் பெறுவதற்காக, அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியத்திடம் (எஃப்ஐபிபி) இருந்து சட்ட விரோதமாக ஐஎன்எக்ஸ் மீடியா என்ற தொலைக்காட்சி நிறுவனத்துக்கு கார்த்தி சிதம்பரம் அனுமதி பெற்றுத் தந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அந்த நிறுவனத்திடம் இருந்து கார்த்தி சிதம்பரம் லஞ்சம் வாங்கியதாகவும், அந்த நிறுவனத்தை மறைமுகமாகத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாகவும் சிபிஐ தரப்பில் கூறப்பட்டது.

பின்னர் இது தொடர்பாக கார்த்தி சிதம்பரத்திடம் விசாரணை நடத்துவதற்காக, சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராக ஜூன் 15-ஆம் தேதி அழைப்பாணைஅனுப்பியது. இதை ரத்து செய்யக் கோரி கார்த்தி சிதம்பரம் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏற்கெனவே தாக்கல் செய்த மனு, மீதான விசாரணை நிலுவையில் இருந்து வருகிறது.

இந்நிலையில், கார்த்தி சிதம்பரத்தை 'கண்காணிக்கப்படும் நபர்' என அறிவித்து மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளதாகவும் அதை ரத்து செய்யக்கோரியும் அவரது சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற இருவரும் இதேபோன்று மனு தாக்கல் செய்தனர்.

இம்மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி எம்.துரைசாமி முன் நடைபெற்றது. இரு தரப்பு வாதங்களுக்குப் பின்னர், மத்திய அரசின் சுற்றறிக்கை நகலை வழங்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதி ஒத்தி வைத்தார். என்ன காரணங்களுக்காக 'கண்காணிக்கப்படும் நபர்' என அறிவிக்கப்பட்டுள்ளது என்ற விளக்கம் சுற்றறிக்கையில் இல்லை. இது குறித்து கேட்டும் உரிய பதில் வழங்கப்படவில்லை.

இந்த விஷயத்தில் சட்ட நடைமுறை பின்பற்றப்படவில்லை என்பதால், அதை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி மேலும் ஒரு மனு கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, கார்த்தி சிதம்பரம் உள்பட மூவருக்கு எதிராக 'கண்காணிக்கப்படும் நபர்' என்று அறிவிக்கப்பட்ட சுற்றறிக்கைக்கு நீதிபதி இடைக்காலத் தடை விதித்தார். மேலும், இம்மனுவுக்கு மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பர் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இந்நிலையில் இன்று காலை கார்த்தி சிதம்பரத்திற்கு எதிரான 'லுக் அவுட்' நோட்டீஸுக்கு சென்னை உயர் நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு செய்தது. அந்த மனு விசாரணைக்கு வந்த பொழுது, கார்த்தி சிதம்பரத்திற்கு எதிரான 'லுக் அவுட்' நோட்டீஸுக்கு சென்னை உயர் நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com