புதுதில்லி: நீட் தேர்வில் தமிழகத்துக்கு ஓராண்டு விலக்கு அளிக்க வகைசெய்யும் அவசர சட்ட முன்வரைவை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இன்று திங்கள்கிழமை (ஆக.14) சுகாதார செயலாளர் ஒப்படைத்தார்.
நீட் தேர்வில் இருந்து, தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு ஓராண்டு விலக்கு அளிக்க மத்திய அரசு ஒத்துழைப்பு வழங்கும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். இதையடுத்து முதல்வர் பழனிசாமியுடன் அவரது இல்லத்தில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் அவசர ஆலோசனை நடத்தினார்.
நீட் தேர்வில் ஓராண்டு விலக்கு அளிக்கும் அவசர சட்டத்திற்கான முன்வரைவு திங்கள்கிழமை (ஆக.14) காலை 10 மணியளவில் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் வழங்கப்படும். சட்டத்திற்கு நிச்சயம் ஒப்புதல் பெற்று விடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. மாணவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் தகவலை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார். இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
இதையடுத்து சுகாதாரத்துறை முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், திட்டங்கள் மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை முதன்மைச் செயலர் எஸ்.கிருஷ்ணன், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்க கூடுதல் இயக்குநர் செந்தில்ராஜ் ஆகிய 3 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை தில்லி சென்றனர்.
இந்நிலையில், இன்று மத்திய உள்துறை அமைச்சத்திடம் நீட் தேர்வில் தமிழகத்துக்கு ஓராண்டு விலக்கு அளிக்க வகைசெய்யும் அவசர சட்ட முன்வரைவை சுகாதாரத்துறை முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் சமர்ப்பித்தார்.