பிரதமர் மோடியின் சுதந்திர தின உரையில் கல்வி, பொது சுகாதாரம், சுற்றுச்சூழல், மின்னணுமயமாதலும் பெண்களும் உள்ளிட்ட கருத்துகள் இடம் பெற வேண்டுமென்று பொதுமக்கள் ஆலோசனை அளித்துள்ளனர்.
முன்னதாக, கடந்த ஜூலை 30-ஆம் தேதி "மனதின் குரல்' வானொலி நிகழ்ச்சியில் பேசிய மோடி, "எனது சுதந்திர தின உரையில் இடம் பெற வேண்டிய விஷயங்கள் குறித்து நாட்டு மக்களிடம் இருந்து கருத்துகளை நான் எதிர்பார்க்கிறேன். கடந்த ஆண்டு எனது சுதந்திர தின உரை மிக நீண்டதாக இருந்தது என்று புகார்கள் வந்தன. இந்த முறை சுருக்கமாகவும், கருத்துச் செறிவுடனும் உரையாற்ற முயற்சிக்க இருக்கிறேன். 40 முதல் 50 நிமிடங்கள் வரை எனது உரை அமையும். இது எனக்கு நானே அமைத்துக் கொண்ட விதிமுறை. எனினும், அதனைக் கடைப்பிடிக்க முடியுமா? என்பது தெரியவில்லை' என்று கூறியிருந்தார்.
இதையடுத்து, நரேந்திர மோடி செயலிக்கு இது தொடர்பாக 6,000-க்கும் மேற்பட்டோர் தங்கள் கருத்துகளை அனுப்பி வைத்தனர்.
இது தவிர "மை கவர்ன்மெண்ட்' இணையதளத்துக்கும் 2,000 கருத்துகள் வந்திருந்தன. அவற்றில் பெரும்பாலானவற்றில் கல்வி, தூய்மை இந்தியா, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பெண் குழந்தைகளுக்கான திட்டங்கள், மின்னணுயமாதலில் பெண்களின் பங்களிப்பு உள்ளிட்டவை பிரதமர் சுதந்திர தின உரையில் இடம்பெற வேண்டுமென்று ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது.
எனவே, பிரதமர் மோடியின் சுதந்திர தின உரையில் இது தொடர்பான கருத்துகள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.