மருத்துவக் கல்லூரி முதல்வரை பலிகடா ஆக்கிவிட்டனர்: மாயாவதி
உத்தரப் பிரதேசத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 60 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் கல்லூரி முதல்வரை பலிகடா ஆக்கிவிட்டனர் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்தார்.
உத்தரப் பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சொந்த மாவட்டமான கோரக்பூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 5 நாள்களில் 60 குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தன. மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் பற்றாக்குறை காரணமாக இந்த உயிரிழப்பு ஏற்பட்டதாகத் தெரியவந்தது.
இந்த சம்பவத்துக்குப் பொறுப்பேற்று மாநில முதல்வரும், சுகாதாரத் துறை அமைச்சரும் பதவி விலக வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், அந்த மருத்துவக் கல்லூரியின் முதல்வர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இது தொடர்பாக மாயாவதி கூறியதாவது:
இந்த மருத்துவமனையில் ஆகஸ்ட் மாதத்தில் குழந்தைகள் அதிக அளவில் உயிரிழப்பது வழக்கமானதுதான் என்று மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சித்தார்த் நாத் சிங் கூறியுள்ளார். இது மிகவும் பொறுப்பற்ற பேச்சாகும். இதனை எங்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
ஆக்சிஜன் சிலிண்டருக்கான பணத்தை அரசு முறைப்படி செலுத்தாத காரணத்தால், ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு 60 குழந்தைகள் உயிரிழந்துவிட்டது தெளிவாகத் தெரிகிறது. மாநில அரசின் பொறுப்பற்ற நிர்வாகத்துக்கு மருத்துவக் கல்லூரி முதல்வரை பலிகடா ஆக்கிவிட்டனர் என்றார்.