பாகிஸ்தான் உதவியுடன் இந்தியா மீது தாக்குதல் நடத்த சீனா திட்டமிட்டு வருவதாக சமாஜவாதி கட்சி நிறுவனரும், முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சருமான முலாயம் சிங் யாதவ் தெரிவித்தார்.
உத்தரப் பிரதேச மாநிலம், இடாவாவில் சமாஜவாதி கட்சி சார்பில் சுதந்திர தின நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முலாயம் சிங் பேசியதாவது: இந்தியாவுக்கு முன்பு பல்வேறு அச்சுறுத்தல்கள் இருக்கின்றன. அவற்றில் மிகப்பெரிய அச்சுறுத்தல், சீனாவிடமிருந்து வந்துள்ளது. இந்தியாவுக்குச் சொந்தமான பகுதிகளை அந்நாடு தொடர்ந்து ஆக்கிரமிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. ஆனால், நமது ராணுவ வீரர்களின் நடவடிக்கையால் சீனாவின் முயற்சி பலிக்கவில்லை.
இந்த நிலையில், நமது எதிரி நாடான பாகிஸ்தானின் உதவியுடன் இந்தியா மீது தாக்குதல் நடத்த சீனா திட்டமிட்டுள்ளது. சீனா - பாகிஸ்தானின் இந்தக் கூட்டணி, இந்தியாவுக்கு மிகவும் ஆபத்தானது. இந்த விஷயம் மிகவும் தீவிரமானதாகும். எனவே, இதனை கவனத்துடன் கையாள வேண்டும் என்றார் முலாயம் சிங் யாதவ்.