உத்தரப் பிரதேசத்தில் 66 குழந்தைகள் இறப்புக்கு காரணமாகக் கூறப்படும் மூளைவீக்க நோய்களான ஏஇஎஸ் (Acute encephalitis syndrome மற்றும் ஜே.இ. (Japanese encephalitis) நோய்களின் தாக்குதலால் நாட்டில் நிகழாண்டில் மட்டும் சுமார் 500 பேர் பலியாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள பாபா ராகவ்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 66 குழந்தைகள், கடந்த 7-ஆம் தேதி முதல் அடுத்தடுத்த நாள்களில் திடீரென உயிரிழந்தன. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதுதொடர்பான விசாரணையில், மருத்துவமனையில் போதிய ஆக்சிஜன் உருளைகள் இல்லாததே குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணம் என்று கூறப்பட்டது. ஆனால், இதனைத் திட்டவட்டமாக மறுத்த மாநில சுகாதாரத் துறை, மிகவும் ஆபத்தான நோய்களாக அறியப்படும் ஏ.இ.எஸ். மற்றும் ஜே.இ. ஆகியவற்றின் தாக்குதல் காரணமாகவே குழந்தைகள் உயிரிழந்ததாக தெரிவித்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக அங்கு தலைமைச் செயலாளர் அளவில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்தக் குழந்தைகள் உயிரிழப்புச் சம்பவத்துக்குப் பிறகு, மேற்குறிப்பிட்ட நோய்கள் குறித்து அதிக அளவில் பேசப்பட்டு வருகிறது. இந்தச் சூழ்நிலையில், இந்நோய்களின் தாக்குதலால் நாடு முழுவதும் நிகழாண்டில் மட்டும் 500 பேர் வரை பலியாகியிருப்பதாக தேசிய நோய் கட்டுப்பாட்டு வாரியம் (என்விபிடிசிபி) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நிகழாண்டில் கடந்த ஜனவரி 1 முதல் ஆகஸ்ட் 13-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், உத்தரப் பிரதேசத்தில் மட்டும் ஏ.இ.எஸ். நோய் தாக்குதலால் 1208 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களில் 152 பேர் இறந்துவிட்டனர். ஜே.இ. நோய் தாக்குதலால் 112 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 3 பேர் உயிரிழந்துவிட்டனர்.
இதேபோல், அஸ்ஸாம், பிகார், மணிப்பூர், ஒடிஸா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும் இந்நோய்களின் தாக்குதலுக்கு இதுவரை 350 பேர் வரை பலியாகியிருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.