சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கு விசாரணைக்கு இந்திராணி முகர்ஜி நேரில் ஆஜராக வேண்டும் என்று தில்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் அவரை அடுத்த மாதம் 9-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்திராணி மற்றும் அவரது கணவர் பீட்டர் முகர்ஜி ஆகியோருக்குச் சொந்தமான ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் அன்னிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரிய விதிகளுக்குப் புறம்பாக வெளிநாட்டில் இருந்து நிதி பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான விசாரணை நடவடிக்கைகளைத் தவிர்க்க மத்திய முன்னாள் அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி உதவியதாகக் கூறப்படுகிறது. இதற்காக குறிப்பிட்ட தொகையை ஆதாயமாக அவர் பெற்றுக் கொண்டதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
இந்த விவகாரத்தில் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை ஆகியவை தனித்தனியே வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றன. கார்த்தி சிதம்பரம், பீட்டர் முகர்ஜி, இந்திராணி முகர்ஜி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்த வழக்கு தில்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுனில் ராணா முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் நிதீஷ் ராணா, 'சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை வழக்கில் இந்திராணி முகர்ஜியை தங்களது கட்டுப்பாட்டில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும்' என்று கோரிக்கை விடுத்தார்.
மேலும், இந்த வழக்கின் விசாரணைக்கு அவரை நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் நிதீஷ் வலியுறுத்தினார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, இந்திராணி முகர்ஜியை செப்டம்பர் 9-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டார்.