புதுதில்லி: பார்சிலோனா நகரில் பொதுமக்கள் மீது வேனை மோதச் செய்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் இந்தியர்கள் யாருக்கும் பாதிப்பு இல்லை என்று வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
ஸ்பெயின் நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்று பார்சிலோனா. இந்நகரின் மையப்பகுதியில் உள்ள லாஸ் ராம்பலாஸ் என்ற சுற்றுலா தலத்தில் மக்கள் நேற்று அதிக அளவில் கூடி இருந்தனர்.
இந்நிலையில் திடீரென மக்கள் கூட்டத்தில் வேன் ஒன்று புகுந்தது. இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர். எனினும் வேன் மோதியதில் 13 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. வாகன தாக்குதல் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும், வேனை ஓட்டிவந்தவன் பிடிபடவில்லை. இந்த தாக்குதலை அடுத்து நகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், பார்சிலோனா தாக்குதலில் இந்தியர்கள் யாரும் காயமடைந்துள்ளதாக எந்த தகவலும் வரவில்லை என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
மேலும், ஸ்பெயினில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பில் இருப்பதாக தெரிவித்துள்ள சுஷ்மா சுவராஜ், அவசர உதவிக்காக ஸ்பெயினில் உள்ள இந்தியர்களை தொடர்பு கொள்ள +34-608769335 என்ற அவசர உதவி எண்களையும் அறிவித்துள்ளார்.