பெங்களூர்: மழைக்காலம் தொடங்கிவிட்டது. வட இந்திய மாநிலங்களில் தொடங்கி தற்போது மெதுவாக தென்னிந்திய மாநிலங்களில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட ஆரம்பித்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை நள்ளிரவில் பெங்களூரில் பெய்த கன மழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதில் ஏராளமான வாகனங்கள் வெள்ளத்தில் சிக்கி பாதிக்கப்பட்டன.
இதனால், பெங்களூருவில் காப்பீடு நிறுவனங்களில் இழப்பீடு கோரி விண்ணப்பங்களும், வாகனங்களும் குவிந்துள்ளன.
இது குறித்து காப்பீடு நிறுவனங்கள் தரப்பில் கூறப்படுவது என்னவென்றால், நூற்றுக்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் காப்பீடு நிறுவனத்தை நாடியுள்ளனர். இதில் ஒவ்வொரு வாகனத்தையும் சரி செய்ய குறைந்தது ஒரு வாரத்துக்கும் மேல் ஆகும். எஞ்ஜினுக்குள் தண்ணீர் சென்றுவிட்டால், எஞ்ஜினை திறந்து சரி செய்ய அதற்கும் மேல் கால அவகாசம் தேவைப்படும்.
இதில் பல வாகன ஓட்டிகள் புத்திசாலித்தனமாக தங்களது வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கியதும், அதனை இயக்காமல் அப்படியே எங்களிடம் கொண்டு வந்தார்கள். அவர்களுக்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும். இதனால், அந்த வாகனங்களின் எஞ்ஜின் நன்றாகவே இருக்கும். சிலர், தங்களது வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கியதைப் பார்த்ததும், அதனை இயக்க முயற்சிப்பார்கள். அப்போதுதான் அந்த வாகனங்களின் எஞ்ஜின் சீஸ் ஆகிவிடும் என்கிறார்கள்.
எனவே, வெள்ளத்தில் சிக்கிய வாகனங்களை இயக்காமல் அப்படியே வாகனங்களைப் பழுதுபார்க்கும் கடைக்கோ அல்லது காப்பீடு நிறுவனத்திடமோ கொண்டு செல்வதுதான் புத்திசாலித்தனம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.