23-ஆம் தேதி சிபிஐ முன் ஆஜராக கார்த்தி சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், தில்லியில் வரும் 23-ஆம் தேதி சிபிஐ அதிகாரிகள் முன் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று
23-ஆம் தேதி சிபிஐ முன் ஆஜராக கார்த்தி சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், தில்லியில் வரும் 23-ஆம் தேதி சிபிஐ அதிகாரிகள் முன் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக, தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணை நடைபெற்றது.
அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு: தில்லியிலுள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில், விசாரணை அதிகாரிகள் முன் கார்த்தி சிதம்பரம் வரும் 23-ஆம் தேதி ஆஜராக வேண்டும். அவரிடம் பலமுறை சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ளலாம். விசாரணையின்போது, தனது தரப்புக்கு ஆதரவு சேர்க்கும் ஆவணங்களை கார்த்தி சிதம்பரம் எடுத்துச் செல்ல வேண்டும். தன்னுடன் ஒரு வழக்குரைஞரையும் அழைத்துச் செல்ல அவருக்கு அனுமதி அளிக்கிறோம். ஆனால், கார்த்தியிடம் விசாரணை நடைபெறும் இடத்துக்கு அருகே உள்ள அறையில்தான் வழக்குரைஞர் இருக்க வேண்டும் என்று தங்களது உத்தரவில் நீதிபதிகள் குறிப்பிட்டனர். அத்துடன், அடுத்தகட்ட விசாரணையை, அடுத்த மாதம் 1-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
முன்னதாக, கார்த்தி சிதம்பரம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கோபால் சுப்ரமணியம், சிபிஐ-யின் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என்றும், முக்கிய அரசியல்வாதிகளின் குடும்பத்தினர் குறிவைக்கப்படுவது தற்போது வழக்கமாகி விட்டது என்றும் வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், 'நீங்கள் (கார்த்தி) எந்த தவறும் செய்யவில்லை என்றால், சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தயங்குவது ஏன்? இந்த வழக்கு தொடர்பாக எந்த கருத்தும் தெரிவிக்க நாங்கள் விரும்பவில்லை. நீங்கள் எப்போது விசாரணைக்கு ஆஜராவீர்கள் என்பதை மட்டும் கூறுங்கள்' என்று தெரிவித்தனர். இதையடுத்து, கார்த்தி சிதம்பரம் விசாரணைக்கு ஆஜராக தயாராக இருப்பதாக கோபால் சுப்ரமணியம் தெரிவித்தார். இந்த வழக்கு விசாரணையையொட்டி, கார்த்தி சிதம்பரத்தின் தந்தை ப.சிதம்பரமும், தாயார் நளினி சிதம்பரமும் நீதிமன்றத்துக்கு வந்திருந்தனர்.
பின்னணி: மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, வெளிநாடுகளில் இருந்து நிதி பெறுவதற்காக, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அன்னிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியத்திடம் இருந்து சட்டவிரோதமாக அனுமதி பெற்றுத் தந்ததாகவும், இதற்காக அந்த நிறுவனத்திடம் இருந்து லஞ்சம் பெற்றதாகவும் கார்த்தி சிதம்பரம் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து கடந்த மே மாதம் 15-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்த சிபிஐ, கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது நண்பர்களின் வீடு, அலுவலகங்களில் சோதனை மேற்கொண்டது.
இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு சிபிஐ அடுத்தடுத்து நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், அவர் ஆஜராகவில்லை. இதைத் தொடர்ந்து, அவரை கண்காணிக்கப்படும் நபராக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது. இந்த நடவடிக்கைக்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றத்தை கார்த்தி சிதம்பரம் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், கார்த்தி சிதம்பரத்தை கண்காணிக்கப்படும் நபராக அறிவித்த மத்திய அரசின் நோட்டீஸுக்குத் தடை விதித்தது.
இதை எதிர்த்து, மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீது கடந்த 14-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதித்த உச்ச நீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு கார்த்தி சிதம்பரம் ஒத்துழைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக வெள்ளிக்கிழமை மீண்டும் நடைபெற்ற விசாரணையின்போது, மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com