சத்தீஸ்கர் மாநிலம், பிலாஸ்பூர் மாவட்டத்தில், அரசு மருத்துவ முகாம்களில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்ட 7 பெண்களுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக, விசாரணை நடத்துவதற்கு முதல்வர் ரமண் சிங் உத்தரவிட்டார்.
பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள கோனி, லவர் ஆகிய கிராமங்களில் முறையே கடந்த 2, 5 ஆகிய தேதிகளில் அரசு மருத்துவமனை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. அதில், 11 பெண்கள் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்டனர். அவர்களில், 7 பேருக்கு கடந்த சில தினங்களுக்கு முன் திடீரென வயிற்று வலி ஏற்பட்டதை அடுத்து, மஸ்தூரி நகர சுகாதார மையத்தில் அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது.
பின்னர், அவர்கள் அனைவரும் பிலாஸ்பூர் மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 6 பேரின் உடல் நிலை தேறியதை அடுத்து, அவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஒரு பெண்ணுக்கு நோய்த் தொற்று இருந்ததால், அவருக்கு மீண்டும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவர், மஸ்தூரி நகர சுகாதார மையத்தில் மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் உள்ளார்.
அவர் அபாயக் கட்டத்தைத் தாண்டி விட்டதாக மாவட்ட தலைமை மருத்துவ, சுகாதாரத் துறை அதிகாரி பி.பி.போதே வெள்ளிக்கிழமை கூறினார். இந்நிலையில், வயிற்று வலி ஏற்பட்ட பெண்களின் கிராமத்துக்கு மருத்துவக் குழுவினர் வெள்ளிக்கிழமை நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.
இதனிடையே, இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்கு முதல்வர் ரமண் சிங் உத்தரவிட்டார்.
முன்னதாக, பிலாஸ்பூர் மாவட்டத்தில், கடந்த 2014-ஆம் ஆண்டு நவம்பர் மாதம், அரசு மருத்துவ முகாம்களில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்துகொண்ட 13 பெண்கள் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.