பயங்கரவாதிகளுக்கும், பிரிவினைவாதிகளுக்கும் நிதி அளித்தது தொடர்பான வழக்கில், தேசிய புலனாய்வு அமைப்பால் (என்ஐஏ) கைது செய்யப்பட்ட ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஜகூர் வட்டாலியை 10 நாள் காவலில் விசாரிக்க தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கியது.
தில்லியில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்ட ஜகூர், மாவட்ட நீதிபதி பூனம் பம்பா முன் வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். ஜகூரை, பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்த வேண்டியிருப்பதால், அவரை 14 நாள் காவலில் விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று தேசிய புலனாய்வு அமைப்பினர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், அவரை 10 நாள் காவலில் விசாரிக்க அனுமதி அளித்து, நீதிபதி உத்தரவிட்டார்.
முன்னதாக ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் உள்ள ஜகூருக்கு சொந்தமான இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் அண்மையில் சோதனை நடத்தினர். அதில், ஜகூர் மேற்கொண்ட பல்வேறு நிதி பரிவர்த்தனைகள், நில பேரங்கள் தொடர்பான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.