உத்தரப்பிரதேச மாநிலத்தில் ரயில் சேவைக்கு பாதிப்பு ஏற்படுத்தியது தொடர்பான வழக்கில் ஆளும் பாஜக எம்எல்ஏக்கள் 2 பேருக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத பிடியாணை உத்தரவை உள்ளூர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவை, முசாஃபர்நகர் தொகுதி எம்எல்ஏ கபில் அகர்வால், புதானா தொகுதி எம்எல்ஏ உமேஷ் மாலிக் ஆகியோருக்கு எதிராக, நீதிபதி கோபால் திவாரி பிறப்பித்துள்ளார். அவர்கள் இருவரையும், வரும் செப்டம்பர் 30-ஆம் தேதியன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு காவல் துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார். கடந்த 2012-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், ஒரு போராட்டத்தின்போது, ரயில் சேவைக்கு பாதிப்பு ஏற்படுத்தியதாக, இந்த இரு எம்எல்ஏக்கள் உள்பட சில பாஜக நிர்வாகிகள் மீது ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதுதொடர்பான வழக்கில் மேற்கண்ட உத்தரவை நீதிமன்றம் தற்போது பிறப்பித்துள்ளது.