ஒடிஸா மாநிலம் குர்தா அருகே சட்ட விரோதமாக வீட்டில் நடத்தப்பட்டு வந்த பட்டாசு ஆலை சனிக்கிழமை அதிகாலை வெடித்து தரைமட்டமாகியதில் மூன்று பெண்களும், இரு சிறுமிகளும் உடல் கருகி இறந்தனர்.
இறந்தோரில் 4 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இந்த விபத்தில் மேலும் மூவர் படுகாயமடைந்தனர்.
இது குறித்து காவல் துறையினர் கூறியது:
குர்தா அருகே சிகோ கிராமத்தில் சனாதன் சேத்தி என்பவர் தனது வீட்டில் சட்ட விரோதமாக பட்டாசுகளைத் தயாரித்து வந்திருக்கிறார். மத்தாப்பு, பட்டாசு தயாரிக்கும் வேலையில் அவரது குடும்பமே ஈடுபட்டுவந்துள்ளது. தீ விபத்து காரணமாக ஆலை திடீரென வெடித்து தரைமட்டமாகியது. தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து கிராமத்துக்குச் சென்று தீயை அணைத்தனர்.
பாபி சேத்தி (40), மாதவி சேத்தி (8), டிக்கிலி சேத்தி (4), டோலி சேத்தி (19), டூட்டி சேத்தி (62) ஆகியோர் விபத்தில் இறந்தவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். காயமடைந்த மற்ற 3 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இரு அரிசி ஆலை அதிபர்கள் கைது: இதனிடையே, ரூ.4 கோடி மதிப்புள்ள அரிசியை அரசுக்குத் திரும்பத் தராமல் மோசடி செய்ததாக வந்த புகாரையடுத்து, இரண்டு அரிசி ஆலை உரிமையாளர்களை ஒடிஸா காவல் துறையினர் கைது செய்தனர்.
நெல்லைப் பெற்றுக்கொண்டு அதற்குரிய அரிசியை திரும்பத் தராமல் மோசடி செய்ததாக ஒடிஸா மாநில குடிமைப் பொருள் வழங்கல் நிறுவனம் அளித்த புகாரின் அடிப்படையில் இருவரும் கைது செய்யப்
பட்டதாக மாநில குற்றப் பிரிவு டிஜிபி பி.கே.சர்மா தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பங்கஜ் அகர்வாலா, மயூர்பஞ்ச் நகரைச் சேர்ந்த திலீப் அக்ரவாலா ஆகியோர் கைது செய்யப்பட்டவர்கள் ஆவர். குடிமைப் பொருள் வழங்கல் நிறுவனம் அளித்த நெல்லைப் பெற்றுக்கொண்டு ரூ.2.97 கோடி மதிப்புள்ள அரிசியை திரும்பத் தராமல் மோசடி செய்ததாக திலீப் மீதும் ரூ.1.22 கோடி மதிப்புள்ள அரிசியை மோசடி
செய்ததாக பங்கஜ் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.