மத்திய அரசின் "மக்கள் மருந்தகம்' திட்டத்தை சீர்குலைப்பதாக, கேரள அரசு மீது பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக கேரள மாநில பாஜக பொதுச் செயலாளர் ஏ.என்.ராதாகிருஷ்ணன், திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
மக்களுக்கு குறைந்த விலையில் தரமான மருந்துகள் கிடைப்பதற்காக, "மக்கள் மருந்தகம்' திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டம் கடந்த 2008ஆம் தொடங்கப்பட்ட போதிலும், கேரளத்தில் மக்கள் மருந்தகங்கள் இன்னும் பிரபலமாகவில்லை. இந்த மருந்தகங்களை பிரபலப்படுத்த, கேரள அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதேபோல, கிராமப் புற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு செயல்படுத்தி வரும் தீன தயாள் உபாத்யாய கிராமின் கௌசல்யா திட்டமும், கேரளத்தில் தோல்வி கண்டுள்ளது.
இதற்கு, மாநில அரசின் அக்கறையின்மையே காரணம். அந்த திட்டம் முறையாக அமல்படுத்தப்பட்டால், வெளிநாடுகளில் குறிப்பாக வளைகுடா நாடுகளில் வேலை தேடும் இளைஞர்கள் பயன்பெறுவர் என்றார்
ராதாகிருஷ்ணன்.