பொய்யான பலாத்கார வழக்கு தொடுத்த பெண் மீது வழக்குப் பதிவு செய்வதற்கு, தில்லி நீதிமன்றம் மறுத்துவிட்டது.
தில்லி துவாரகா பகுதியைச் சேர்ந்த ஒரு பெண், மனை வணிக அதிபர் ஒருவர் மீது கடந்த 2015-ஆம் ஆண்டு பாலியல் பலாத்கார புகார் அளித்தார். அந்த பெண், ஏற்கெனவே விவாகரத்து பெற்றவர். அவரது புகாரின்பேரில், மனை வணிக அதிபருக்கு எதிராக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், அந்த பெண் பிறழ் வாக்குமூலம் அளித்தார். மனை வணிக அதிபர், தன்னை பாலியல் பலாத்காரம் செய்யவில்லை என்றும், இருவரும் பரஸ்பர சம்மதத்தின்பேரிலேயே உறவு வைத்திருந்ததாகவும் அவர் கூறினார்.
இதையடுத்து, வழக்கில் இருந்து மனை வணிக அதிபரை, நீதிமன்றம் விடுவித்தது.
ஆனால், பொய்யான பாலியல் பலாத்கார வழக்கு தொடுத்தமைக்காக, அந்த பெண் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று காவல்துறை தரப்பில் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால், மனை வணிக அதிபரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற எண்ணம் தனக்கு இல்லை எனவும், மனஅழுத்தம் காரணமாகவே அவர் மீது வழக்கு தொடுத்ததாகவும் அந்த பெண் கூறினார்.
அதையேற்றுக் கொண்ட நீதிபதி கௌதம் மேனன், காவல்துறையினரின் மனுவை நிராகரித்தார்.