பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்தியா 71-ஆவது சுதந்திர ஆண்டில் உலகின் வளரும் பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளது என்று பாஜக மூத்த தலைவரும், இந்தியா - சீனா நாடாளுமன்றக் குழுத் தலைவருமான தருண் விஜய் தெரிவித்தார்.
சீனாவில் உள்ள குவான்ஜாவ் நகரில் பிரிக்ஸ் மாநாடு அண்மையில் நடைபெற்றது. இதில் தருண் விஜய் பங்கேற்றார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பன்மைத்துவம், நல்லிணக்கப்போக்கு உள்ளிட்டவற்றால் உலக நாடுகளில் பிரதமர் நரேந்திர மோடிக்கு நல்ல புகழ் கிடைத்துள்ளது. இதன் காரணமாக துடிப்புமிக்க, மிகப்பெரிய ஜனநாயக நாடாக இந்தியா வீறுநடைபோடுகிறது. உலகமே குடும்பமாக கருதும் மிக உயர்ந்த தத்துவத்தை இந்தியா கொண்டுள்ளது. தேநீர் விற்றுக் கொண்டிருந்த சாதாரண மனிதர் இன்று நாட்டின் பிரதமராகியுள்ளார். சமூகத்தின் அடித்தட்டைச் சேர்ந்த ஒருவர் நாட்டின் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பிரிக்ஸ் நாடுகளுக்கிடையே கலாசார, தொன்மை நாகரிகத் தொடர்புகள் உள்ளன. சகோதரர்கள் ஒற்றுமையாக வாழும் போது மிகப் பெரிய பிரச்னைகளுக்கும் தீர்வு காண முடியும் என சீனப் பழமொழியை தற்போது நினைவில் கொள்ள வேண்டும். ஒரு நாட்டின் பயங்கரவாதி எனப்படுபவர் ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் பயங்கரவாதியாக கருதப்படுகிறார். எனவே, கூட்டு முயற்சி மேற்கொண்டு பயங்கரவாதத்தை வேரறுக்க வேண்டும் என்று மாநாட்டில் பேசியதாக அறிக்கையில் தருண் விஜய் தெரிவித்துள்ளார்.