தலாக் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்று பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கு சம உரிமை கிடைத்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக சுட்டுரையில் (டுவிட்டர்) அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது: முத்தலாக் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு, முஸ்லிம் பெண்களுக்கு அதிகாரப் பகிர்வளிக்கும் முக்கிய நடவடிக்கையாகும். இதன் மூலம் அவர்களுக்கு சம உரிமை கிடைத்துள்ளது. இது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு என்று அதில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
போராடிய பெண்களுக்கு வாழ்த்துகள்: தலாக் தொடர்பான தீர்ப்பை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் வரவேற்றுள்ளார். இதுகுறித்து சுட்டுரையில் கருத்து தெரிவித்துள்ள அவர், 'தலாக் முறையை ரத்து செய்வதற்காக போராடிய பெண்களுக்கு எனது வாழ்த்துகள்' என்று குறிப்பிட்டுள்ளார்.