வதேரா நிறுவனம் தொடர்புடைய நில மோசடி வழக்கு: சிபிஐ விசாரணைக்கு ராஜஸ்தான் அரசு பரிந்துரை

காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவின் நிறுவனத்துக்கு தொடர்பிருப்பதாகப் பதிவு

காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவின் நிறுவனத்துக்கு தொடர்பிருப்பதாகப் பதிவு செய்யப்பட்டுள்ள நில மோசடி வழக்கை சிபிஐ அமைப்பு விசாரிக்க ராஜஸ்தான் அரசு பரிந்துரைத்துள்ளது.
இதுகுறித்து ராஜஸ்தான் உள்துறை அமைச்சர் குலாப் சந்த் கட்டாரியா, ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: பிகானீர் நகரில் சுமார் 350 ஏக்கர் நிலம் போலியான பெயர்களில் வாங்கப்பட்டதாக 18 முதல் தகவல் அறிக்கைகள் (எஃப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டன. அவற்றில் சுமார் 4 எஃப்ஐஆர்கள் வதேராவுக்குச் சொந்தமான நிறுவனத்துக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த நிறுவனமும் இந்த நில மோசடியில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்ததன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடந்த 2014-ஆம் ஆண்டில் இந்த விவகாரம் சட்டப் பேரவையில் எழுப்பப்பட்டது.
இந்த வழக்கை விசாரிக்குமாறு சிபிஐ அமைப்புக்கு தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்றார் குலாப் சந்த் கட்டாரியா.
மாநிலத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் வரவுள்ள நிலையில், சிபிஐ அமைப்பை ராஜஸ்தான் அரசு தவறாகப் பயன்படுத்துவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் சச்சின் பைலட் கூறுகையில், 'நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பாஜகவுடன் தொடர்புடையவர்கள் ஆவர். இந்த வழக்கில் அவர்கள் ஒத்துழைக்க முன்வந்தால் நாங்களும் ஒத்துழைப்போம்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com