ஜம்மு: தமிழில் வெளிவந்த 'மருதமலை' பட பாணியில் பிச்சைக்காரனிடம் திருடிய போலீஸ்காரர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் ரம்பான் மாவட்ட காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருபவர் முனவர் ஹுசைன். இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக காவல் நிலையத்திற்கு வெளியே நடைபாதையில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த பிச்சைக்காரர் ஒருவரிடம் இருந்து பணத்தினை பிடுங்கியுள்ளார். அபொழுது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களை வைரலாக பரவின.
இதனைத் தொடர்ந்து தலைமைக் காவலர் முனவர் ஹுசைன் அங்கிருந்த பிற காவலர்களால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். இது தொடர்பாக ரம்பான் மாவட்ட மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் மோகன் லால் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தலைமைக் காவலர் முனவர் ஹுசைன் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுளார். தற்பொழுது அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே கிஸ்த்வர் காவல் நிலையத்தில் பணியாற்றிய அவர், தனது குடிப்பழக்கத்தின் காரணமாக இங்கு இட மாற்றம் செய்யப்பட்டார். அங்கு அவர் மீது மூன்று வழக்குகள் உள்ளன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.