ஆதார் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பின் மூலம் தனிநபர் உரிமை காப்பது என்பது அடிப்படை உரிமை இல்லை என்று 1954 மற்றும் 1962ல் வழங்கப்பட்ட தீர்ப்புகள் ரத்தாகின்றன.
தனிநபர் ரகசியம் காப்பது அடிப்படை உரிமையே என ஆதார் வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று பரபரப்புத் தீர்ப்பினை அளித்துள்ளது.
தனிநபர் ரகசியம் என்பது அடிப்படை உரிமை இல்லை என்ற மத்திய அரசின் வாதத்தை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.
ஆதார் விவரங்களால் தனிமனித சுதந்திரம் பறிக்கப்படுவதாகத் தொடரப்பட்ட வழக்கில், தனிமனித சுதந்திரம் என்பது அனைவருக்கும் முக்கியமானது என்று 9 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பளித்துள்ளது. இதில், 9 நீதிபதிகளுமே ஒருமித்த கருத்தை தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆதாரைக் கட்டாயமாக்கி மத்திய பாஜக அரசு பல்வேறு நடவடிக்கைககளை முன்னெடுத்து வந்த நிலையில், இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் எத்தகைய தீர்ப்பை வழங்கப்போகிறது என்பதை அனைத்துத் தரப்பினரும் ஆவலோடு எதிர்நோக்கியிருந்தனர். இந்த நிலையில், மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் இன்று இந்த தீர்ப்பினை வழங்கியுள்ளது.
ஆதார் அட்டைக்காக மக்களின் தனிப்பட்ட விவரங்களை சேகரிப்பதற்கு எதிராக பல்வேறு மனுக்கள் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டன.
மக்களின் தனிப்பட்ட விவரங்களை சேகரிப்பது முறையல்ல என்றும் அது தனிநபர் ரகசிய காப்புக்கு எதிரானது என்றும் அந்த மனுக்களில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
முன்னதாக, காரக் சிங், எம்.பி. சர்மா ஆகியோரது வழக்குகளில், தனிநபர் ரகசியம் காத்தல் என்பது அடிப்படை உரிமையாகாது என்று உச்ச நீதிமன்றத்தால் முன்பு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அதாவது, காரக் சிங் வழக்கு மீதான தீர்ப்பை கடந்த 1960-ஆம் ஆண்டில் 6 நீதிபதிகள் கொண்ட அமர்வும், எம்.பி. சர்மா வழக்கு மீதான தீர்ப்பை கடந்த 1950-ஆம் ஆண்டில் 8 நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு சாசன அமர்வும் அளித்துள்ளன.
இவ்விரு தீர்ப்புகளிலும், தனிநபர் ரகசியம் காத்தல் என்பது அடிப்படை உரிமையாகாது என்று உச்ச நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில், 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, 'தனிநபர் ரகசியம் காப்பது அடிப்படை உரியே' என்று அளித்திருக்கும் தீர்ப்பினால், மேற்கண்ட இவ்விரு தீர்ப்புகளும் ரத்தாகின்றன.