மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரும், மத்தியப்பிரதேச மாநிலம் விதிஷா தொகுதியின் மக்களவை உறுப்பினரான சுஷ்மா ஸ்வராஜை நீண்ட காலமாக காணவில்லை என பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது காங்கிரஸ் கட்சியினரின் சதிச்செயல் என்று பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், விதிஷா மக்களவை தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டவர். தற்போது விதிஷா நகரின் பல இடங்களில், 'சுஷ்மாவை காணவில்லை' என்ற வாசகத்துடன் அவரது புகைப்படம் அடங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
மேலும் சுவரொட்டியில் கூறியப்பட்டுள்ளதாவது: விதிஷா விவசாயிகள் இறந்து வருகின்றனர்; விதிஷாவின் விவசாயிகள் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர்; விதிஷாவின் வர்த்தகர்கள் துன்பப்படுகின்றனர்; விதிஷாவின் இளைய தலைமுறையினர் வேலை இல்லாமல் உள்ளனர்; விதிஷா மக்கள் அதிருப்தியில் உள்ளனர்; விதிஷா மக்களவை தொகுதி உறுப்பினரான சுஷ்மா ஸ்வராஜை எங்காவது பார்த்தால், அவரை தொடர்பு கொள்ள முடியாமல் விதிஷா மக்கள் ஏமாற்றப்பட்டு விட்டதாக கருதுவதாக தெரிவியுங்கள். காணாமல் போன எம்.பி., பற்றி தகவல் தெரிந்தால், ஆனந்த் பிரதாப் சிங் என்பவரிடம் தெரிவியுங்கள் என்று கூறப்பட்டுள்ளது. .
இது குறித்து மாவட்ட பாஜக தலைவர் தினேஷ் சோனி கூறுகையில், சுவரொட்டிகளைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது, ஆனால், அப்படி எதுவும் நடந்திருந்தால், அது எதிர்க்கட்சியினரின் சதி வேலை. அது அவர்களின் மனநிலையை பிரதிபலிக்கிறது என்றார்.
மேலும், சுஷ்மா சமீபத்தில் தான் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார். அவர் பயணம் செய்ய கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். எனினும், அவர் போபால் நகருக்கு வந்து தொகுதி மக்களை அவ்வப்போது சந்தித்து வருகிறார்,'' என்றார்.
இந்நிலையில், சுஷ்மா தொகுதியில் உள்ள பிரச்சினைகளை பட்டியலிட்டு, சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
காங்கிரஸ் தலைவர் சேனியா, ராகுல் காந்தி மற்றும் பிரதமர் நரேந்திர மோடியையும் காணவில்லை என அவரவர் தொகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.