இந்தியாவின் மிகப்பெரிய பொதுச்சேவைத் துறையாக ரயில்வே துறை அமைந்துள்ளது. நாடு முழுவதும் தினமும் பல லட்சம் பேர் இதன்மூலம் பயணித்து பயனடைகின்றனர். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தின் போது இந்த ரயில் சேவை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
அன்று முதல் இன்று வரை இந்தியாவின் மிகப்பெரிய போக்குவரத்துத் துறையாக ரயில்வே உள்ளது. மேலும், உலகளவிலும் அதிகளவில் பொதுமக்களால் பயன்படுத்தப்படும் துறையாகவும் விளங்குகிறது.
இந்தியாவின் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு பயணிக்க குறைந்த கட்டணம் மற்றும் நேரம் உள்ளிட்ட காரணங்களால் இவை மிகவும் விரும்பப்படுகின்றன. இந்நிலையில், ஆங்காங்கே மிகப்பெரிய ரயில் விபத்துககள் நடைபெற்றும் வருகின்றன.
போதிய நிர்வாகமின்மை காரணமாகவே இதுபோன்ற விபத்துகள் நடைபெறுவதாக பொதுமக்கள் தரப்பில் அவ்வப்போது குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது. மேலும், ரயில்வேத்துறையை தனியார்மயமாக்கும் முடிவை பரிசீலித்து வருவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தரப்பில் கூறப்படுகிறது.
அவ்வாறு சமீபத்தில் கூட உத்தரபிரதேச மாநிலத்தில் வெவ்வேறு இடங்களில் இரண்டு விபத்துகள் நடந்தன. இதனால் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனால் மத்திய ரயில்வே துறை அமைச்சராக இருந்த சுரேஷ் பிரபு ராஜிநாமா செய்தார்.
இதுதவிர, தமிழகம் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களில் முன்னதாக ஏற்பட்ட மாபெரும் ரயில் விபத்துகள் காரணமாக அப்போதைய ரயில்வே துறை அமைச்சர்களும் ராஜிநாமா செய்தனர்.
முன்னதாக 1956-ம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழகத்தின் அரியலூர் மாவட்டத்தில் நடந்த மிகப்பெரிய ரயில் விபத்தில் 142 பேர் உயிரிழந்தனர். எனவே இந்த விபத்துக்கு தார்மீக பொறுப்பேற்று அப்போதைய ரயில்வே துறை அமைச்சர் லால் பகதூர் சாஸ்திரி, தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
அதுபோல 1999-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அஸ்ஸாமில் நடந்த மற்றொரு கோர ரயில் விபத்தில் சிக்கி 290 பேர் மரணமடைந்தனர். இதனால் அப்போதைய ரயில்வே துறை அமைச்சரான நிதீஷ் குமார், ராஜிநாமா செய்தார்.