தில்லியில் உள்ள ஒரு வங்கியில் வெறும் ரூ.5 மற்றும் ரூ.10 நாணயங்களாக மட்டும் 2.3 லட்சம் ரூபாயைத் திருடிய மூன்று கொள்ளையர்களை காவலர்கள் கைது செய்தனர்.
பணம் மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு புதிய ரூபாய் தாள்களில் கண்காணிப்பு மைக்ரோ சிப்கள் பொருத்தப்பட்டதாகப் பரவிய வதந்தியின் காரணமாகவே இவ்வாறு நாணயங்களைத் திருடியதாக அந்தக் கொள்ளையர்கள் கூறியுள்ளனர்.
தில்லியில் உள்ள சிண்டிகேட் வங்கியின் அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பணிபுரியும் இவர்கள் மூவரும் உத்திர பிரதேசத்தை சேர்ந்தவர்கள். கடந்த திங்கட்கிழமை இரவு ஜன்னல் துவாரம் வழியாக வங்கிக்குள் நுழைந்து பணத்தை திருடி உள்ளனர். அடுத்த நாள் காலை வங்கி ஊழியர் ஒருவர் ஜன்னல் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்த போது நாணயங்களாக 2 லட்சத்திற்கும் அதிகமான தொகை காணாமல் போயிருப்பதை அறிந்து காவலர்களிடம் புகார் அளித்துள்ளார்.
களவு குறித்து விசாரிக்க வந்த காவலர்கள் கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோவின் மூலம் மூன்று நபர்கள் முகமூடி அணிந்து அன்று இரவு வங்கிக்குள் நுழைந்திருப்பதை உறுதி செய்தனர். அவர்களுள் ஒருவரின் கையில் ஆங்கில எழுத்து ‘ஆர்’ என்று பச்சை குத்தப்பட்டிருப்பதைக் கவனித்த காவலர்கள், அருகிலிருக்கும் இடங்களில் விசாரணையைத் துவங்கினர். இறுதியாக வங்கிக்கு அருகிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் பணிபுரிபவர்கள்தான் அந்தக் கொள்ளையர்கள் என்பதைக் கண்டுபிடித்து அவர்களைக் கைது செய்தனர். களவு நடந்த 12 மணி நேரத்தில் கொள்ளையர்களை காவலர்கள் கண்டுபிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
விசாரணையின் போது திரைப்படம் ஒன்றைப் பார்த்து கொள்ளைக்கான திட்டத்தை தீட்டியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் “ரூ.2000 நோட்டுகளைக் கடைகளில் கொடுத்து மாற்றுவதும் கடினம் அதனால்தான் நாணயங்களைத் திருடலாம் என முடிவு செய்தோம்” என்றும் கூறியுள்ளனர்.