ஏர்செல்-மேக்ஸிஸ் ஒப்பந்த வழக்கில் ஊழல் நடந்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மற்றும் அவரது மூத்த சகோதரரும் சன் குழுமத் தலைவருமான கலாநிதி மாறன் ஆகியோர் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கு மீதான விசாரணையில் மாறன் சகோதரர்களை விடுவித்து தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து மாறன் சகோதரர்கள் விடுவிப்பு தொடர்பாக அமலாக்கத்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இதன்மீது நடைபெற்ற விசாரணையில், அடுத்த 4 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு மாறன் சகோதரர்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்நிலையில், வருகிற செப்டம்பர் மாதம் 20-ந் தேதியன்று 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கின் மீதான தீர்ப்பு தேதி அறிவிக்கப்படும் என சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.ஷைனி தெரிவித்தார்.
தகுதியற்ற நிறுவனங்களுக்கு முறைகேடாக 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததாக முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்பி கனிமொழி உள்ளிட்ட 14 பேர் மீது சிபிஐ குற்றம் சுமத்தியிருந்தது.
அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அரசுக்கு 22 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டதாகத் தொடரப்பட்டிருந்த இந்த வழக்கில், 6 ஆண்டுகளாக நடந்த விசாரணை கடந்த ஏப்ரல் மாதம் நிறைவடைந்தது.