உச்ச நீதிமன்ற  தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா பதவியேற்பு

உச்ச நீதிமன்றத்தின் 45வது தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி தீபக் மிஸ்ரா (64) இன்று பதவியேற்று கொண்டார்.
உச்ச நீதிமன்ற  தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா பதவியேற்பு

புதுதில்லி: உச்ச நீதிமன்றத்தின் 45வது தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி தீபக் மிஸ்ரா (64) இன்று காலை பதவியேற்று கொண்டார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த ஜே.எஸ். கேஹரின் பதவிக்காலம் நேற்று ஞாயிற்றுக்கிழமையுடன் (ஆக.27)  நிறைவடைந்தது.

இதையடுத்து, சட்ட விதிகளின்படி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக யாரை நியமிக்க வேண்டும் என்பது குறித்த பரிந்துரையை அளிக்கும்படி, கேஹரிடம் மத்திய சட்ட அமைச்சகம் கேட்டிருந்தது. அதன்படி, உச்ச நீதிமன்றத்தில் தனக்குப் பிறகு மிகவும் மூத்த நீதிபதியாக இருக்கும் தீபக் மிஸ்ராவின் பெயரை சட்ட அமைச்சகத்திடம் கேஹர் பரிந்துரைத்தார். கடந்த செவ்வாய்க்கிழமை அடுத்த தலைமை நீதிபதியாக மிஸ்ரா அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில், இன்று காலை உச்ச நீதிமன்றத்தின் 45வது தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி தீபக் மிஸ்ரா (64) இன்று காலை பதவியேற்று கொண்டார்.

குடியரசுத் தலைவர் மாளிகை தர்பார் அரங்கில் நடைபெற்ற மிக எளிமையான விழாவில், தீபக் மிஸ்ராவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

64 வயதான நீதிபதி மிஸ்ரா, அரசியலமைப்பு, சிவில், குற்றவியல், வருவாய், சேவை மற்றும் விற்பனை வரி விவகாரங்களில் ஒடிஸா உயர் நீதிமன்றத்திலும் சேவை தீர்ப்பாயத்திலும் திறம்பட வாதாடியுள்ளார்.

கடந்த 1977-ஆம் ஆண்டில் வழக்குரைஞராக பதிவு செய்த தீபக் மிஸ்ரா, ஒடிஸா உயர் நீதிமன்றத்தில் பல்வேறு விவகாரம் தொடர்பான வழக்குகளில் திறம்பட வாதாடியுள்ளார். இதையடுத்து, ஒடிஸா உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக 1996-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.

பின்னர், மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து, பாட்னா உயர் நீதிமன்றத்திலும், 2010 ஆம் ஆண்டு மே 24 ஆம் தேதி தில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக அவர் நியமிக்கப்பட்டார். பிறகு, தில்லி உயர் நீதிமன்றத்தில் இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதியாக தீபக் மிஸ்ரா கடந்த 2011-ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் தேதி நியமிக்கப்பட்டார்.

பதவியேற்பு விழாவில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தில்லி உள்ளிட்ட பல மாநில உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியவர் தீபக் மிஸ்ரா. நீட் தேர்வு, ஜல்லிக்கட்டு, ஆதார், நீதிபதி கர்ணன் விவகாரம் உள்ளிட்ட பல முக்கிய வழக்குகளில் முக்கியத்துவம் வாய்ந்த உத்தரவுகளை பிறப்பித்த உச்ச நீதிபதிகள் அமர்வில் தீபக் மிஸ்ரா இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com