டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தில்லியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்காவின் உடல்நிலை முன்னேற்றமடைந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் பிரியங்கா கடந்த 23-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூத்த மருத்துவர் அரூப் பாசு சிகிச்சை அளித்து வருகின்றார்.
பிரியங்காவின் உடல்நிலை குறித்து அந்த மருத்துவமனை நிர்வாகக் குழுத் தலைவரும் மருத்துவருமான டி.எஸ். ராணா திங்கள்கிழமை கூறுகையில், "அவர் குணமடைந்து வருகிறார்; அவருக்கு தற்போது காய்ச்சல் எதுவும் இல்லை. ஆய்வுக் கூட பரிசோதனை முடிவுகளும், அவரது உடல்நிலையில் ஆக்கப்பூர்வமான முன்னேற்றம் இருப்பதையே காட்டுகின்றன' என்றார்.
தில்லியில் பரவலாக டெங்கு காய்ச்சல், சிக்குன் குனியா, மலேரியா ஆகிய நோய்கள் பரவி வருகின்றன. கடந்த 19ஆம் தேதி வரையிலும், மேற்கண்ட நோய்களால் 657 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக தில்லி மாநகராட்சி அறிக்கை தெரிவிக்கிறது. தில்லி சர் கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 12 வயது சிறுவன் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடந்த 1ஆம் தேதி திடீரென உயிரிழந்தார். இதுபோல், கடந்த மாதம் 1ஆம் தேதி முதல் கடந்த 16ஆம் தேதி வரையிலும் 59 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரிய வந்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.