புதுதில்லி: அத்தியாவசிய பொருள்கள் பதுக்கல் மற்றும் விலையேற்றத்தினை தடுக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் வெங்காய விலையினைக் கட்டுக்குள் வைக்கும் நடவடிக்கைகளினை எடுக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
வெங்காயத்தினை இருப்பு வைப்பது தொடர்பான கட்டுப்பாடுகள் மற்றும் விலை கட்டுப்பாட்டுக்கான நடவடிக்கைகள் தொடர்பாக அரசின் அறிவிப்பு கடந்த 25-ஆம் தேதியிட்டு வெளியாகியுள்ளது.
வெங்காயத்தின் விளைச்சல் மற்றும் சந்தை தேவையானது கடந்த வருடம் இதே மாதம் இருந்த அளவிலிருந்தாலும், கடந்த சில வாரங்களாக தொடர்ந்து அதிகரித்து வரும் வெங்காயத்தின் விலை ஏற்றமே அரசின் இந்த முடிவுக்கு காரணமாக அமைந்துள்ளது.
இது தொடர்பாக இன்று மத்திய அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கை விபரம் வருமாறு:
வெங்காயத்தினை பதுக்குவோர், ஊக வணிகத்தில் ஈடுபடுவோர், அதன் மூலம் லாபம் அடைவோர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இதன் மூலம் வெங்காயத்தின் விலை குறைந்து நுகர்வோருக்கு உடனடியாக பயன் கிடைக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் இந்தியா முழுவதும் சராசரியாக வெங்காயத்தின் விலை ஒரு கிலோ ரூ.15 என்ற அளவில் இருந்து, ஒரு கிலோ ரூ.28.94 என்ற அளவுக்கு கூடியுள்ளது.
அதேபோல மெட்ரோ நகரங்களில் சென்னையில் கிலோ ரூ.31; தில்லியில் கிலோ ரூ.38; கொல்கத்தாவில் கிலோ ரூ.40 மற்றும் மும்பையில் கிலோ ரூ.33 என்ற அளவில் வெங்காயம் தற்பொழுது விற்பனையாகிறது.