புது தில்லி: அஸ்ஸாம், பிகார் உட்பட வெள்ளத்தில் மூழ்கியிருக்கும் 6 மாநிலங்கள் உட்பட 12 மாநிலங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கன மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் 12 மாநிலங்களின் பல பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு கன மழை முதல் பலத்த கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், 14 நதிகளின் நீர்மட்டம் அபாய அளவை தாண்டும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை மும்பையின் புறநகரான சாண்டாக்ராஸில் 30 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இந்த நிலையில், வடக்கு மற்றும் மத்திய மகாராஷ்டிர மாநிலப் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மிகக் கன மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
ராஜஸ்தான், குஜராத், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும், இம்மாநிலங்களில் உள்ள மாஹி, சபர்மதி, பனாஸ் ஆகிய நதிகளின் மீது கட்டப்பட்டிருக்கும் அணைகள் ஏற்கனவே 90 முதல் 94 சதவீத கொள்ளளவை எட்டிவிட்டது குறித்தும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை முதல் மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களின் 15 பகுதிகளில் 19 முதல் 4 செ.மீ. வரை மழை பதிவாகியுள்ளது.
இந்த நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையமும், மத்திய நீர்வளத் துறையும் வெளியிட்டிருக்கும் கன மழை குறித்த எச்சரிக்கைச் செய்தியில், அடுத்த 3 நாட்களுக்கு மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், கோவா, கர்நாடகா, ராஜஸ்தான், சட்டீஸ்கர், தெலங்கானா, ஆந்திரம், தமிழ்நாடு, கேரளா, டாம் மற்றும் டையு ஆகிய மாநிலங்களில் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகக் கூறியுள்ளது.
இதில், மகாராஷ்டிராவின் மும்பை, குஜராத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன. அஸ்ஸாம், பிகார், உத்தரப்பிரதேசம், ஒடிசா மாநிலங்களில் ஏற்கனவே வெள்ளம் ஏற்பட்டு ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பல முக்கிய நதிகள் மீது கட்டமைக்கப்பட்டிருக்கும் அணைகள் இதுவரை 66 முதல் 45 சதவீத கொள்ளளவை எட்டியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில்தான் கன மழை பெய்யவிருக்கும் 12 மாநில அரசுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.