அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா, தில்லியில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்ற பின்னர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை வெள்ளிக்கிழமை சந்தித்தார்.
இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் ஒபாமா பேசியதாவது:
மரியாதை நிமித்தமாக பிரமதர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினேன். அப்போது மதசார்பின்மையுடன் அரசு செயல்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். இதையே அமெரிக்க அரசுக்கும் வலியுறுத்துகிறேன். மக்கள் தங்களுக்குள் இருக்கும் வேற்றுமையை போக்க வேண்டும்.
இந்தியாவைப் பொறுத்தவரையில் இங்குள்ள பெரும்பான்மை சமூகத்தினர் மற்றும் ஆட்சியாளர்கள் பெறுமைப்பட வேண்டிய ஒன்று, இங்குள்ள சிறுபான்மையினர் அதிலும் குறிப்பாக முஸ்லிம்கள் தங்களை இந்தியர்களாகவே உணர்கின்றனர் என்பதுதான்.
அதிலும் குறிப்பாக இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் பாதுகாப்பாகவும், தன்மானத்துடன் உள்ளது மிகச் சிறப்பானதாகும். இதுபோன்ற சூழ்நிலை உலகின் பெரும்பாலான இடங்களில் கிடையாது. இந்தப் போக்கு இனி வரும் காலங்களிலும் தொடர விரும்புகிறேன்.
ஜனநாயகத்தின் முக்கிய கதாநாயகர்கள் ஒரு நாட்டின் அதிபர்களோ அல்லது பிரதமர்களோ கிடையாது. அவர்கள் குடிமகன்களே ஆவர். ஒவ்வொரு குடிமகனும் தங்களுடைய பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும்.
ஒரு குறிப்பிட்ட அரசியல் தலைவர்களை பின்பற்றுவதற்கு முன்பாக அவர்களின் நடவடிக்கைகளை ஆராய வேண்டும். நாம் எதற்காக இவருக்கு ஆதரவு தெரிவிக்கிறோம் என்று நமக்குள்ளாகவே கேள்வி எழுப்ப வேண்டும். சுயபரிசோதனைகள் மற்றும் சிந்தனைகளால் மட்டுமே ஜனநாயகத்தை பாதுகாக்க முடியும்.
இந்தியாவில் உள்ள அனைத்து சமூகத்தினரும் தாங்கள் வேற்றுமைக்கு ஆளாக மாட்டோம் என்ற உறுதிமொழி எடுத்தால் மட்டுமே அதுபோன்ற தலைவர்களை உருவாக்க முடியும். மேலும் பல விஷயங்கள் தொடர்பாக பிரதமர் மோடியுடன் பேசினேன். ஆனால் எங்களின் தனிப்பட்ட உரையாடல்களை பகிர விரும்பவில்லை என்று தெரிவித்தார்.