லக்னௌ: உத்தரப்பிரதேச மாநில உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் 12 மேயர் பதவிகளை வென்று பாரதிய ஜனதா கட்சி வெற்றி முகத்தில் இருக்கிறது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் இன்று காலை தொடங்கியது. மாலை 5 மணிக்குள் மொத்த தேர்தல் முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
16 முனிசிபல் கார்ப்பரேஷன், 198 முனிசிபல் கவுன்சில் மற்றும் 438 நகர பஞ்சாயத்துகளுக்கும் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. கடந்த 22-ஆம் தேதி நடைபெற்ற முதல் கட்ட உள்ளாட்சித் தேர்தலில் 52.59 சதவீதமும், 26-ஆம் தேதி நடைபெற்ற இரண்டாம் கட்டத் தேர்தலில் 49.3 சதவீத வாக்குகளும் பதிவாகின. 3-ஆம் கட்டத் தேர்தலில் 53 சதவீத வாக்குகள் பதிவாகின.
மூன்று கட்டங்களையும் சேர்த்து இந்த தேர்தலில் மொத்தம் 52.5 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த முறை வாக்குப் பதிவு சதவீதம் அதிகரித்துள்ளது.
2012ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் 12 மாநகராட்சிகளில் 10 இடங்களை பாஜக கைப்பற்றியது. அதே சமயம், கவுன்சில்களில் அதிகபட்ச இடங்களை சுயேட்சைகளே கைப்பற்றினர்.
இந்த முறை வாக்கு எண்ணிக்கையில் வாரணாசி,கோரக்பூர், காசியாபாத், பேரேலி, ஆக்ரா, பெரோசாபாத், அயோத்யா, மதுரா, லக்னௌ, கான்பூர், சஹரன்பூர் மற்றும் மொராதாபாத் உள்ளிட்ட 12 மேயர் பதவிகளை பாரதிய ஜனதா கட்சி வென்றுள்ளது.
ஜான்சி மற்றும் பேரேய்லி ஆகிய இரு இடங்களில் அக்கட்சி வேட்பாளர்கள் முன்னணியில் உள்ளனர்.
அதே சமயம் அலிகார் மற்றும் மீரட் ஆகிய இரு இடங்களை பகுஜன் சமாஜ் கட்சி வென்றுள்ளது.
பிரதான எதிர்க்கட்சியான காங்கிரசுக்கு மிகுந்த அவமானம் ஏற்படுத்தும் வகையில் துணைத் தலைவரான ராகுல் காந்தியின் சொந்தத் தொகுதியான அமேதியில், பாஜக வேட்பாளர் அமேதி நகர் பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். இது காங்கிரசுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.