சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்கில், குஜராத்தைச் சேர்ந்த ஸ்டெர்லிங் பயோடெக் மருந்து தயாரிப்பு நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்களில், தில்லியில் 7 இடங்களில் அமலாக்கத் துறையினர் வியாழக்கிழமை சோதனை நடத்தினர்.
சட்ட விரோத பணப் பரிவர்த்தனை மூலம், ரூ.5,000 கோடி வரை மோசடி செய்ததாக, அந்த நிறுவனத்தின் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கில் அடிப்படையில், அந்த நிறுவனத்தின் உரிமையாளர்களுக்கு நெருக்கமானவர்களின் வீடு மற்றும் அலுவலகங்கள் என தில்லியில் 7 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனை நடத்தினர்.
இந்தச் சோதனையின்போது, பல முக்கிய ஆவணங்களும், கணினி குறுந்தகடு, ஹார்டு டிஸ்க் போன்ற கணினி பாகங்களும் கைப்பற்றப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கெனவே, அந்த நிறுவனத்தின் மீதும், அதன் இயக்குநர்கள் சேத்தன் ஜெயந்திலால் சந்தேசரா, தீப்தி சேத்தன் சந்தேசரா, ராஜ்பூஷண் ஓம்பிரகாஷ் தீட்சித், நிதின் ஜெயந்திலால் சந்தேசரா, விலாஸ் ஜோஷி ஆகியோர் மீதும் சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
இதுதவிர, பட்டய கணக்காளர் ஹேமந்த் ஹாதி, ஆந்திர வங்கியின் முன்னாள் இயக்குநர் அனூப் கார்க் உள்ளிட்டோர் மீதும் சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. ஆந்திர வங்கியின் கீழ் இயங்கும் கிளை அமைப்பில் இருந்து, அந்த நிறுவனம் ரூ.5,000 கோடி வரை கடன் பெற்றது. பிறகு அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்தாததால், அது வாராக்கடனாக மாறியது. கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி நிலவரப்படி, அந்த நிறுவனம் செலுத்த வேண்டிய கடன் ரூ.5,383 கோடியாக இருந்தது. இந்த வழக்கு தொடர்பாக, தில்லியைச் சேர்ந்த ககன் தவான் என்ற தொழிலதிபர், கடந்த அக்டோபர் மாதம் 31-ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.