கடந்த வெள்ளிக்கிழமை புது தில்லியில் இருக்கும் ஒரு அரங்கில் இந்தியாவைச் சேர்ந்த 250-திற்கும் அதிகமான சமூக ஆர்வலர்கள், சாதனையாளர்கள் மற்றும் பலர் பங்குபெற்ற கூட்டத்தில் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான ஒபாமா அவர்களும் கலந்துகொண்டார். இதில் பெங்களூருவை சேர்ந்த திருநங்கை சமூக ஆர்வலரான அக்கை பத்மஷலிஸ் கேட்ட கேள்வி அரங்கையே அமைதியில் ஆழ்த்தியது.
அக்கை அவர்களைப் பார்த்து “உங்களது கேள்வியை கேளுங்கள்” என்று ஒபாமா கூறினர், அப்போது அக்கை “ஜனாதிபதி அவர்களே, நான் ஒரு திருநங்கை, இந்தியாவின் அரசியலமைப்பு சட்டப் பிரிவு 377-ன் கீழ் நான் ஒரு குற்றவாளி, நான் விபச்சாரம் செய்துள்ளேன், பிச்சை எடுத்துள்ளேன், இந்தச் சமுதாயத்தால் நிராகரிக்கப் பட்டுள்ளேன், ஒரு சமூக ஆர்வலராக உங்கள் முன் நான் கொண்டு வர பல பிரச்னைகள் உள்ளது. சிறுபான்மையாக இருக்கும் எங்கள் மீது பாயும் இந்தச் சமூகத்தின் பயங்கரவாதத்திற்கும், செய்யாத தவற்றுக்காக நாங்கள் புறக்கணிக்கப்படுவதற்கும் எதிரான ஒரு மாற்றத்தை நான் எப்படிக் கொண்டு வருவது?” என்று கேட்டார்.
அதற்கு ஒபாமா “இந்தியாவின் அரசியலமைப்பைப் பற்றி எனக்கு முழுமையாகத் தெரியாது அதனால் அதைப் பற்றி கருத்துச் சொல்ல நான் விரும்பவில்லை, ஆனால் உங்களது கேள்விக்கான பதில் உங்களது குரலை பலரும் கேட்குமாறு செய்வது தான் இதற்கான தீர்வு, நீங்கள் சந்தித்த சவால்களை, பிரச்னைகளை பிறர் அறியச் செய்வதன் மூலம் அதே போன்ற பிரச்னையை அவர்கள் சந்தித்து இருந்தால் அவர்களும் உங்களுடன் வந்து கை கோர்ப்பார்கள், இப்படியே இந்த வட்டம் பெரியதாகும் போது சிறுபான்மையாக இருந்தாலும் உங்களது குரல் பலரையும் சென்றடையும். இதன் மூலம் நிச்சயம் ஒரு மாற்றம் உண்டாகும்” என்று பதிலளித்துள்ளார்.