இறந்ததாக அறிவிக்கப்பட்ட இரட்டை குழந்தைகளில் ஒன்று இறுதிச் சடங்கிற்கு முன்பு, உயிருடன் இருந்ததைக் கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை மீது விசாரணை நடத்த தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது. தவறு நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக குழந்தைகளின் தாத்தா கூறுகையில், 'ஷாலிமார் பாகில் உள்ள மேக்ஸ் தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கபட்டிருந்த வர்ஷாவுக்கு கடந்த 28-ம் தேதி இரட்டை ஆண், பெண் குழந்தைகள் பிறந்தன. அதில் முதலில் பிறந்த ஆண் குழந்தைக்கு அவசர சிகிச்சை தேவைப்படுகிறது என்றும் பெண் குழந்தை இறந்துவிட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்னர் ஆண் குழந்தையும் உயிரிழந்துவிட்டதாக கூறி பிளாஸ்டிக் பையில் போட்டு கொடுத்தனர். இறுதிச் சடங்கு நடத்துவதற்காக மதுபன் சௌக் அருகே சென்று கொண்டிருந்தபோது, ஆண் குழந்தை அசைவதையும், மூச்சுவிடுவதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்துவிட்டோம். உடனடியாக பிளாஸ்டிக் பையை கிழித்து குழந்தையை எடுத்து பீத்தம்புராவில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தோம். தற்போது ஆண் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது' என்றார்.
இந்தச் சம்பவம் குறித்து மேக்ஸ் மருத்துவமனை அளித்துள்ள அறிக்கையில், 'இந்த இரட்டை குழந்தைகள் குறைமாத குழந்தைகளாக (22 வாரம்) கடந்த மாதம் 30-ம் தேதி பிறந்தன. அதில் ஒரு குழந்தை செயற்கை சுவாசத்தின் கீழ் வைக்கப்பட்டிருந்தது. எந்தவித அசைவும் குழந்தையிடம் காணப்படாததால் அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், அந்தக்குழந்தை உயிருடன் இருப்பது அதிர்ச்சியாக உள்ளது. எனினும், இந்தக் குழந்தைகளுக்கு மருத்துவம் பார்த்த மருத்துவரை உடனடியாக கட்டாய விடுப்பில் அனுப்பி உள்ளோம். அந்தக் குழந்தைகளின் பெற்றோரிடம் தொடர்பில் இருக்கிறோம்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், 72 மணி நேரத்திற்குள் முதல் கட்ட அறிக்கையும், ஒரு வாரத்திற்குள் இறுதி அறிக்கையும் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.