2018 மார்ச்சில் விண்ணில் ஏவப்படுகிறது சந்திராயன் 2 விண்கலம்!: முதல் முறையாக லேண்ட் ரோவர் கருவியை அனுப்புகிறது இஸ்ரோ

வரும் மார்ச் மாதம் ஜிஎஸ்எல்வி மார்க் 2 ராக்கெட் மூலம் சந்திராயன் 2 விண்கலத்தை நிலவுக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ வட்டாரங்கள் தெரிவித்தன.
பெங்களூரு இஸ்ரோ ஆராய்ச்சி மையத்தில் சோதனை செய்யப்பட்டு வரும் சிறிய வகை லேண்ட் ரோவர் கருவி.
பெங்களூரு இஸ்ரோ ஆராய்ச்சி மையத்தில் சோதனை செய்யப்பட்டு வரும் சிறிய வகை லேண்ட் ரோவர் கருவி.

வரும் மார்ச் மாதம் ஜிஎஸ்எல்வி மார்க் 2 ராக்கெட் மூலம் சந்திராயன் 2 விண்கலத்தை நிலவுக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கான திட்டப் பணிகள் பெங்களூருவில் உள்ள இஸ்ரோ ஆய்வு மையத்தில் நடைபெற்று வருவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
நிலவு குறித்த ஆராய்ச்சியில் இந்தியா இதுவரை நிகழ்த்திய பெரிய சாதனை எனில் அது சந்திராயன்-1 திட்டம் என்று கூறலாம். நிலவின் வட்டப் பாதையில் சந்திராயன்-1 விண்கலத்தை சரியாக நிலை நிறுத்திய போது உலகமே இந்தியாவைத் திரும்பிப் பார்த்தது. மிகவும் குறைந்த செலவில், நிறைய அறிவியல் கணிப்புகளை வைத்து சந்திராயன்-1 செயல் திட்டம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டது.
இந்நிலையில் சந்திராயன், நிலவில் நீர்வழித் தடங்கள் தெரிவதாக கூறியது. இந்தக் கண்டுபிடிப்பு இதுவரை எந்த விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களும் செய்யாதது ஆகும். அதன்பின் சில நாள்களில் இந்தியாவின் கண்டுபிடிப்பு உண்மைதான் என்று அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா அறிவித்தது.
சந்திராயன்-2: இப்போது ஜிஎஸ்எல்வி மார்க் 2 ராக்கெட் மூலம் சந்திராயன்-2 விண்கலத்தை அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் விண்கலம் மட்டுமின்றி சிறிய அளவிலான ரோபோ போன்ற ரோவர் ஒன்று அனுப்பப்பட உள்ளது. இந்த சந்திராயன்-2 ரோவர் நிலவின் மேற்பரப்பில் இறக்கப்பட்டு அங்கு ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும். இதற்கு முன் 2013-இல் கடைசியாக நிலவுக்கு சீனா இது போன்ற ரோவர் ஒன்றை அனுப்பியுள்ளது.
அதன்படி நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்துக்கு முன்னோட்டமாகவே இந்த ரோவர் அனுப்பும் திட்டத்தில் இஸ்ரோ களம் இறங்கி உள்ளது. இப்போது இந்த ரோவர் திட்டம் 2018 மார்ச் மாதத்தில் முடிவடைந்து, அதே மாத இறுதியில் நிலவுக்கு அனுப்பப்படும் என இஸ்ரோ வட்டாரங்கள் தெரிவித்தன.
எவ்வளவு எடை ?: ஜிஎஸ்எல்வி மார்க் 2 ராக்கெட் மூலம் கொண்டு செல்லப்படவுள்ள சந்திராயன் -2 விண்கலம் 3,290 கிலோ எடை கொண்டதாக இருக்கும். இதில் ரஷியாவின் இúஸாடோப் நிறுவனம் ஆல்ஃபா எமிட்டர் பாகங்களை வழங்கியுள்ளது. மேலும், நவீன ரக முப்பரிமாண கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. எல்லாம், திட்டமிட்டப்படி நடக்கும்பட்சத்தில் பூமியில் இருந்து புறப்பட்ட 14-ஆவது நாளில், நிலவில் தனது பணியை சந்திராயன்-2 தொடங்கும்.
லேண்ட் ரோவர்: சந்திராயன் -1 கருவிகள் மூலமாகக் கிடைத்த விவரங்களை ஆய்வு செய்வதற்காக, நிலவில் இறங்கி ஆய்வு செய்வதற்காக லேண்ட் ரோவர் என்ற தானாக இயங்கும் கருவி அனுப்பப்பட உள்ளது.
சுமார் 20 கிலோ எடை கொண்ட இந்தக் கருவியில் 6 சக்கரங்கள் பொருத்தப்பட்டிருக்கும். இந்தக் கருவி சூரியசக்தி மூலம் இயங்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். லேண்ட் ரோவர் கருவியை நிலவில் எந்த இடத்தில் இறங்கச் செய்வது என்று இப்போது விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com