புதுதில்லி: காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி இஸ்லாமிய அரசர் பாபரின் பக்தனாகவும், சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் உறவினராகவும் விளங்குகிறார் என்று பாரதிய ஜனதா கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது
உச்ச நீதிமன்றத்தில் செவ்வாயன்று அயோத்தி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது சன்னி வக்ப் வாரியம் சார்பாக காங்கிரஸ் தலைவரும், மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் ஆஜரானார். இந்த விவகாரம் பெரும் சர்சையைக் கிளப்பியது. இது தொடர்பாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தனது நிலையைத் தெளிவுபடுத்த வேண்டும் என்று பாரதிய ஜனதா தலைவர் அமித் ஷா கூறியிருந்தார்.
இந்நிலையில் பாஜக செய்தித் தொடர்பாளரான நரசிம்ம ராவ் இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் தொடர்ச்சியான ட்வீட்டுகள் மூலம் கூறியிருந்தாவது:
ராகுல் காந்தி இஸ்லாமியத் தலைவர்களான ஒவைஸி மற்றும் ஜிலானிஸ் ஆகியோருடன் இணைந்து கொண்டு அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படுவதை எதிர்க்கிறார். அவர் தற்பொழுது இஸ்லாமிய அரசர் பாபரின் பக்தனாகவும், சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் உறவினராகவும் விளங்குகிறார்.
நேரு வம்சாவழியானது தற்பொழுது இந்தியாவுக்குள் ஊடுருவிய இத்தகைய இஸ்லாமிய அரசர்கள் பக்கம் நிற்கிறது. இவையெல்லாம் நேரு வம்சாவழியின் நெறிபிறழ்வு மற்றும் பரிகாச நிலையைக் காட்டுகிறது.
இவ்வாறு அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.