குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள சூழ்நிலையில் அங்கு முகாமிட்டு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போது, நரேந்திர மோடி அரசாங்கம் இங்குள்ள 7 பணக்காரர்களுக்காக மட்டுமே இயங்குவதாக குற்றஞ்சாட்டி வருகிறார்.
அதுமட்டுமல்லாமல், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் தினம் ஒரு கேள்வியும் எழுப்பி வருகிறார். இவை ட்விட்டர் வாசிகளால் நகைச்சுவைக்கு உள்ளாவது தனிக்கதை.
இந்நிலையில், இதுபோன்று கேள்வி எழுப்பும் நிகழ்வில் பொருளாதார நிலை குறித்து வழக்கம்போல் தவறான தகவல்களை தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுல் பதிவிட்டார். இதுவும் அனைவரின் மத்தியிலும் கேலிக்கூத்தானது. மேலும், சரியான தகவல்களை பகிர வேண்டி பாஜக-வினர் கோரிக்கை வைத்தனர்.
நீக்கப்பட்ட பழையது
உதாரணத்துக்கு கடந்த 2014-ல் சமையல் எரிவாயு விலை ரூ.414-ஆக இருந்தது 2017-ல் ரூ.742-ஆக உயர்ந்துள்ளது. இது பொருளாதாரத்தில் 179 சதவீத வீழ்ச்சியை சந்தித்துள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், உண்மையில் அதன் விலைவாசி 79 சதவீதம் அதிகரித்துள்ளது. இதுபோன்று அனைத்து பொருட்களின் விலைகளையும் அதன் நிஜ விலைவாசியில் இருந்து 100 சதவீதம் கூடுதலாக குறிப்பிட்டு பதிவிட்டார்.
திருத்தப்பட்ட புதியது
இதனையடுத்து, உடனடியாக அந்தப் பதிவு நீக்கப்பட்டு சரிசெய்யப்பட்ட ஒன்றை பதிவிட்டார். இதுகுறித்து ராகுல் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில்,
மனிதர்கள் என்றாலே தவறு செய்யக்கூடியவர்கள்தான். ஆனால் நான் ஒன்றும் நரேந்திர மோடி அவர்கள் இல்லை. எனது தவறை உணர்ந்து உடனே திருத்திவிட்டேன். இதற்காக பாஜக நண்பர்கள்அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.