புதுதில்லி: பிரதமர் மோடி பண மதிப்பு நீக்க நடவடிக்கை கொண்டு வந்த பின்னர், கடந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டிலேயே அதிக அளவாக அவரது சொந்த மாநிலமான குஜராத்தில்தான் 2000 ரூபாய் கள்ள நோட்டுகள் பிடிபட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பிரதமர் மோடி கடந்த ஆண்டு இறுதியில் நவம்பர் 8 ஆம் தேதியன்று புழக்கத்தில் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். இந்த பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் முக்கிய குறிக்கோள்களில் ஒன்றாக கள்ள நோட்டுகளை ஒழிப்பதும் கூறப்பட்டது.
இந்த நடவடிக்கைக்கு பின்னர் சில நாட்களில் புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டன. ஆனால் சில நாட்களில் புதிதாய் 2000 ருபாய் கள்ள நோட்டுகள் நாடு முழுவதும் புழக்கத்திற்கு வந்து விட்டன. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அத்தகைய நோட்டுகள் கைப்பற்றப்பட்டன.
தற்பொழுது அவ்வாறு நோட்டுகள் கைப்பற்றப்பட்ட விபரங்களை கடந்த மாதம் 30-ஆம் தேதி தேசிய குற்ற ஆவண காப்பகம் அறிக்கையாக வெளியிட்டது. அதன்படி நவம்பர் 8-க்கும் டிசம்பர் 31-க்கும் இடைப்பட்ட 53 நாட்களில் நாடு முழுவதும் 2272 இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன் மூலம் நாடு முழுவதும் மக்கள் புதிதாய் 2000 நோட்டுகளைப் பெறுவதற்கு அல்லாடிக் கொண்டிருந்த நாட்களில் இங்கு நோட்டுகள் தாராளமாக புழக்கத்திற்கு வந்துள்ளது தெளிவாகிறது.
மாநில வாரியாக நோட்டுக்கள் கைப்பற்றப்பட்ட பட்டியல் வருமாறு:
1.குஜராத்-1300 நோட்டுகள்; 2.பஞ்சாப் - 548 நோட்டுகள்; கர்நாடகா - 254 நோட்டுகள்; தெலங்கானா - 114; மஹாரஷ்டிரா - 27; மத்திய பிரதேசம் - 8; ராஜஸ்தான் - 6; ஆந்திரா, அருணாச்சல பிரதேசம் & ஹரியாணா - தலா 3 நோட்டுகள்; ஜம்மு காஷ்மீர் & கேரளா - தலா 2 நோட்டுகள்; இறுதியாக மணிப்பூர் & ஒடிஷா - ஒரு நோட்டு
பண மதிப்பு நீக்க நடவடிக்கை மூலம் கள்ள நோட்டினை ஒழிப்பேன் என்று கூறிய பிரதமர் மோடியின் சொந்த மாநிலத்திலேயே, நாட்டிலேயே அதிக அளவில் 2000 ரூபாய் கள்ள நோட்டுகள் பிடிபட்ட சம்பவம் வித்தியாசமான நகைமுரணாக அமைந்துள்ளது.