பிரமதர் நரேந்திர மோடி மீதான தனது விமர்சனம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு சித்தரிக்கப்பட்டுள்ளது என்றும், தன்னுடைய தாய்மொழி ஹிந்தி அல்ல, எனவே நான் ஆங்கிலத்தில் கூறியதால் இதுபோன்று வெளியாகியுள்ளது. எனவே தவறான மொழிபெயர்ப்புக்கு மன்னிப்பு தெரிவித்துக்கொள்வதாக காங்கிரஸ் மூத்த தலைவரான மணிசங்கர் ஐயர் கூறினார்.
இந்த விமர்சனம் தொடர்பாக மணிசங்கர் ஐயருக்கு காங்கிரஸ் கட்சி நோட்டீஸ் அனுப்பியது. மேலும் அவரை கட்சியில் இருந்தும் தற்காலிக இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது.
மணிசங்கர் ஐயரின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் கடும் அதிருப்தி தெரிவித்திருந்தார். மேலும், பாஜக-வும், பிரமதர் மோடியும் தான் காங்கிரஸ் மீது இதுபோன்று கீழ்த்தரமாக விமர்சிப்பர். ஆனால், காங்கிரஸுக்கு என்று ஒரு மாண்பு உள்ளது. எனவே இதற்கு அவர் மன்னிப்பு கோர வேண்டும் என்று தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையல், காங்கிரஸ் கட்சியின் எந்த முடிவுக்கும் கட்டுப்படுவதாக மணிசங்கர் ஐயர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
காங்கிரஸ் கட்சிக்கு நான் அவப்பெயர் ஏற்படுத்தியருந்தால் அதற்காக மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் வேண்டுமென்றே எதுவும் கூறவில்லை. எனது கருத்து காங்கிரஸ் கட்சியை காயப்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
முன்னதாக, நாடாளுமன்றத் தேர்தலின் போது நடந்த பிரசாரத்தில், நரேந்திர மோடி வேண்டுமென்றால் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் டீ விற்பனை செய்யலாம். ஆனால், நாட்டின் பிரதமராக முடியாது என்று சர்ச்சைக்குரிய கருத்தினை தெரிவித்தார்.
பின்னர் தேர்தலில் வெற்றிபெற்று பாஜக ஆட்சியமைத்ததும், 'சாய் பே சர்ச்சா' என்ற பெயரில் பிரமதர் மோடி, மக்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சியை துவங்கி அதற்கு பதிலடி அளித்தார்.
ஆனால், தான் அவ்வாறு தெரிவிக்கவில்லை என்றும், வேண்டுமென்றால் இணையத்தில் சென்று சோதித்துக்கொள்ளுமாறும் மணிசங்கர் ஐயர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.