லக்னோவில் இருக்கும் கிருஷ்ணாகர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த திங்கட்கிழமை ராணுவ வீரர் ஒருவர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்து விட்டு இப்போது வரதட்சணையாக ரூ.15 லட்சம் கேட்பதாக காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரியும் இந்தப் பெண் கடந்த ஜூன் மாதம் திருமண தகவல் மையமான மேட்ரிமோனி வலைத்தளத்தில் இவரை முதன்முதலாய் சந்தித்துள்ளார். இரண்டு மாதங்களாக நேரில் சந்திக்காமல் தொலைப்பேசியிலேயே பேசி பழகி உள்ளனர். இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் இவரை நேரில் சந்திக்க வந்த அந்த ராணுவ வீரர் இவருடனேயே தங்கியுள்ளார். அந்தச் சமயத்தில் தான் இவரைப் பலவந்த படுத்திக் கற்பழித்துவிட்டு விரைவாகத் திருமணம் செய்து கொள்வதாக வாக்களித்துள்ளார்.
சில நாட்களுக்குப் பிறகு தன்னை ராணுவத்திற்குத் திரும்பி வர அழைப்பு வந்துள்ளதாகவும், ராணுவத்தில் இருந்து வந்தவுடன் நமது திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று கூறி சென்றுள்ளார். ஆனால் ராணுவத்திற்குச் சென்ற சில நாட்களிலேயே இவருடைய அழைப்புகளைத் தவிர்க்க தொடங்கியுள்ளார். இறுதியாகப் போன வாரம் “உன்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றால் எனக்கு 15 லட்சம் வரதட்சணை வேண்டும்” என்று நிபந்தனை தெரிவித்துள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ந்து போன அந்தப் பெண் என்ன செய்வது என்று புரியாமல் காவல் துறையில் புகார் அளித்துள்ளார். வழக்கைப் பதிவு செய்த காவலர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த ராணுவ வீரரின் பெயரும், பதவியும் குறிப்பிட படவில்லை.