அகமதாபாத்: குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி வெளியிட்டார்.
பாரதிய ஜனதா ஆட்சி செய்து வரும் குஜராத்தில் 182 இடங்களை கொண்ட சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக 89 தொகுதிகளில் சனிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மீதமுள்ள 93 தொகுதிகளில் 14-ந் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.
தொடர்ந்து 22 ஆண்டுகளாக பாஜக இங்கு ஆட்சி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமர் நரேந்திர மோடியும், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி வெள்ளிக்கிழமை மாலை வெளியிட்டார்.
அந்த நிகழ்வில் பேசிய அருண் ஜேட்லி, 'இந்தியாவில் பொருளாதார வளர்ச்சியில் குஜராத் மாநிலம் முதல் இடம் வகித்து வருகிறது; கடந்த ஐந்து ஆண்டுகளில் குஜராத் மாநிலம் 10 சதவீதம் பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது' என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.