சென்னை: தேசியவாதமும் ஹிந்துத்துவமும் ஒன்றே என்று பேசிய பாஜக மத்திய அமைச்சர் அனந்த்குமாரை, 'நீங்கள் எல்லாரும் ஹிட்லரின் மறுபிறவிகளா என்று நடிகர் பிரகாஷ் ராஜ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
நடிகர் பிரகாஷ் ராஜ் இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் பாஜக மத்திய அமைச்சர் அனந்த்குமார் ஹெக்டே பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய 39 நொடிகள் ஓடக் கூடிய விடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் அமைச்சர், 'தேசியவாதமும் ஹிந்துத்துவமும் தனித்தனியாக பிரித்தறிய முடியாத ஒன்றாகும் என்றும், இந்த உலகிலிருந்து இஸ்லாம் முற்றிலுமாக நீக்கப்பட வேண்டும்' என்றும் கன்னடத்தில் தெரிவித்திருந்தார்.
இந்த விடியோவினைத் தொடர்ந்து நடிகர் பிரகாஷ் ராஜ் வரிசையான மூன்று ட்வீட்டுகளின் மூலமாகத் தெரிவித்திருந்தாவது:
நீங்கள் தேசியவாதமும் ஹிந்துத்துவமும் ஒன்றே என்று கூறுகிறீர்கள். மதத்தினை எதற்காக தேசியவாதத்திற்குள் கொண்டு வருகிறீர்கள்? அப்படி என்றால் ஹிந்து அல்லாதவர்களான , ஆனால் நமது நாட்டின் பெருமைகளாக விளங்கும் அம்பேத்கர், அப்துல் கலாம், ஏ.ஆர்.ரஹ்மான், குஷ்வந்த் சிங் ..என்று தொடர்ந்து கொண்டே இருக்கும் பட்டியலில் உள்ளவர்களைப் பற்றி என்ன சொல்வீர்கள்?
அதே சமயம் மதத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் மனிதத்தின் மீது மட்டுமே நம்பிக்கை கொண்டுள்ள என் போன்றவர்களின் கதி என்ன? அப்படியானால் நாங்கள் எல்லாரும் இந்த நாட்டின் குடிமக்கள் இல்லையா? யார் நீங்கள் எல்லாம்? உங்களது செயல் திட்டம்தான் என்ன? நீங்கள் மறுபிறவி பற்றி எல்லாம் பேசுவதால், ஹிட்லரின் மறுபிறவிகளா நீங்கள்?
இறுதியாக வெளியிட்ட ஒரு ட்வீட்டில், 'அமைச்சரின் பேச்சினை மதச்சார்பற்ற நமது நாட்டின் பிண்ணனியில் ஆராய்ந்து, அவரின் நோக்கத்தினையும், வெட்கமற்ற அரசியல் குறித்தும் தெரிந்து கொள்ளுமாறு தனது ரசிகர்களை பிரகாஷ் ராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.