குஜராத் மாநிலத்துக்கான சட்டப்பேரவைத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 9-ந் தேதி சனிக்கிழமை (இன்று) காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இதையடுத்து டிசம்பர் 14-ந் தேதி 2-ஆம் கட்ட வாக்குப்பதிவும், டிசம்பர் 18-ந் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன.
இந்நிலையில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல், குஜராத்தில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியதாவது:
குஜராத் தேர்தலில் மக்கள் அனைவரும் திரண்டு வந்து வாக்களித்து நமது ஜனநாயகத்தை போற்ற வேண்டும். அதிலும் குறிப்பாக தற்போது வாக்களிக்கவுள்ள முதல் வாக்காளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்தினை தெரிவித்துக்கொள்கிறேன்.
குஜராத் தேர்தலை முன்னிட்டு நான் இதுவரை கேட்ட 10 கேள்விகளுக்கும் பிரதமர் மோடி, இதுவரை பதிலளிக்கவில்லை. இப்போது 11-ஆவது கேள்வியை முன்வைக்கிறேன். உங்கள் தேர்தல் பிரசாரங்களில் வளர்ச்சி, முன்னேற்றம் என்ற வார்த்தையை மறந்தது ஏன்?
கடந்த 22 வருடங்களாக குஜராத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு அவர்களின் ஆட்சியில் வளர்ச்சியும், முன்னேற்றமும் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். இந்நிலையில், அப்படி ஒன்று உண்மையெனில், அதை முன்னிறுத்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபடலாமே!
முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் வரை தேர்தல் வாக்குறுதியை பாஜக அறிவிக்காதது ஏன்? வாக்குப்பதிவின் முன்இரவில் அவசரமாக வெளியிடுகின்றனர். அப்படியென்றால் ஆட்சிக்கு வந்தால் என்ன ஆகும் என்பதை மக்கள் அறிவார்கள் என்றார்.