'நானோ சிகிச்சை முறை'- ரூ.10 ஆயிரத்தில் புற்றுநோய்க்கு மருத்துவம்!

புதிய வகை நானோ சிகிச்சை தொழில்நுட்பத்தின் மூலம் ரூ.10 ஆயிரத்தில் புற்றுநோய்க்கு மருத்துவம் செய்யும்...
பெங்களூருவில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டவர்களின் ஒரு பகுதி.
பெங்களூருவில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டவர்களின் ஒரு பகுதி.

புதிய வகை நானோ சிகிச்சை முறையில் ரூ.10 ஆயிரத்தில் புற்றுநோய்க்கு மருத்துவம் மேற்கொள்ளும் முயற்சியில் ஐஐடி, மும்பை பேராசிரியர் டாக்டர். ரோஹித் ஸ்ரீவஸ்தவா மற்றும் கொச்சியைச் சேர்ந்த நானோ தொழில்நுட்ப வளாகத்தின் முதல்வர் ஷாந்திகுமார் வி நாயர் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், 'நானோ மருத்துவமுறை கருத்தரங்கம் - 2017' பெங்களூருவில் நடைபெற்றது. இதில் ஐஐடி, மும்பை பேராசிரியிர் டாக்டர். ரோஹித் ஸ்ரீவஸ்தவா பேசியதாவது:

புற்றுநோயை எதிர்கொள்ளும் விதமாக புதிய மருத்துவ சிகிச்சை முறை தற்போது ஆராயப்பட்டு வருகிறது. இந்த புதிய முயற்சி விரைவில் முழுமையாக்கப்பட்டு வெற்றிகரமாக பரிசோதிக்கப்படும். இந்த நானோ சிகிச்சை முறையின் மூலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறுவை சிகிச்சை மற்றும் கீமோதெரபி ஆகியவை தவிர்க்கப்படும். 

மேலும் இந்த புதிய முறையால் மருத்துவச் செலவுகளும், சிகிச்சை பெறும் நாட்களும் பெரிய அளவில் குறையும் நிலை ஏற்படும். இப்போதைய காலகட்டத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் சிகிச்சை பெற குறைந்தபட்சம் ரூ.5 லட்சம் வரை செலவு ஏற்படுகிறது. இந்த நிலை முற்றிலும் மாறும்.

இந்த சிகிச்சை முறையானது தங்கத்தின் நானோ பார்டிகலுடன் புற்றுநோய் எதிர்ப்பு மருந்தினை இணைத்து புற்றுநோய் பாதித்துள்ள பகுதிகளில் செலுத்தப்படும். பின்னர் அவை இன்ஃப்ரா ரெட் மூலமாக 50 டிகிரிக்கு வெப்பமாக்கப்படும். இதன்மூலம் செலுத்தப்பட்ட மருந்து நேரடியாக புற்றுநோய் பாதித்த பகுதிகளில் செலுத்தப்படும். 

இந்த சிகிச்சை முறையின் முதல்கட்ட பரிசோதனைகள் வெற்றிகரமாக முடிந்துள்ளது. அடுத்தகட்ட நகர்வுகளாக இதன் 2-ஆம் கட்ட பரிசோதனை முறையினை மேற்கொள்ள இருக்கிறோம் என்றார்.

இதுகுறித்து கொச்சியைச் சேர்ந்த நானோ தொழில்நுட்ப வளாகத்தின் முதல்வர் ஷாந்திகுமார் வி நாயர் தெரிவித்ததாவது:

இந்த நானோ சிகிச்சை முறையின் மூலமாக புற்றுநோயை உருவாக்கும் செல்களை எளிதில் கண்டறிந்து கட்டுப்படுத்த முடியும். மேலும் ஒரே வழியில் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கும் பல்வகை மருந்துகளை செலுத்தும் தன்மை குறித்தும் ஆராய்ந்து வருகிறோம்.

இவ்வகை சிகிச்சை முறையின் பரிசோதனைகளுக்கு ரூ.7 கோடி வரை நிதி தேவைப்படுகிறது. அதற்காக www.impactguru.co என்ற இணையதள பக்கத்தினை உருவாக்கி அதில் க்ரௌட் ஃபன்டிங் முறையில் நன்கொடை பெற்று வருகிறோம். இந்த நன்கொடை முறையை துவக்கி இந்த 45 நாட்களில் இதுவரை ரூ.63,000 க்ரௌட் ஃபன்டிங் முறையில் நன்கொடை பெற்றுள்ளோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com