குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவீதம் அதிகரித்தாலும், பாஜகவே வெற்றி பெறும் என்று மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் ராம்தாஸ் அதாவாலே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அந்த மாநிலத்தின் வதோதரா நகரில், அவர் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. மேலும், படேல் சமூக போராட்ட அமைப்பின் ஆதரவையும் அந்தக் கட்சி பெற்றுள்ளது.
இதுபோன்ற காரணங்களால் அந்தக் கட்சிக்கு முந்தைய தேர்தலைவிட அதிக சதவிகித வாக்குகள் கிடைக்கலாம். எனினும், இந்தத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைப்பது உறுதி.
பிரதமர் நரேந்திர மோடி மிகச் சிறந்த தேர்தல் வியூக நிபுணர் ஆவார். அவருக்கு கட்சியின் தலைவர் அமித் ஷா உதவியளித்து வருகிறார். இருவரும் குஜராத் மண்ணின் மைந்தர்கள்; மாநில நிலவரங்களை நன்கு உணர்ந்தவர்கள் ஆவர்.
இந்தத் தேர்தலுக்குப் பிறகும் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கவிருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு ஹார்திக் படேல் ஏன் ஆதரவளித்தார் என்பது புரியவில்லை.
அவர் என்னைச் சந்தித்திருந்தால், பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசி படேல்களுக்கான இட ஒதுக்கீடு பிரச்னைக்கு ஒரு தீர்வைக் கண்டிருப்பேன்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் ஜாதியினரும் பலனடையும் வகையில், தற்போது இட ஒதுக்கீடுக்கு அளிக்கப்பட்டுள்ள 49.5 சதவீத உச்ச வரம்பை 75 சதவீதமாக அதிகரிக்க வேண்டும். கூடுதலாக உள்ள 25 சதவீதத்தை தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டவர்கள் பாதிக்கப்படாத வகையில் பொருளாதார அடிப்படையில் அனைத்து தரப்பினருக்கும் வழங்க வேண்டும் என்றார் அவர்.